|
இந்தியாவின் பாதுகாப்பு உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு இரகசிய விஜயம் |
|
|
|
Friday, 20 June 2008 |
|
இந்தியாவின் உயர்மட்ட பாதுகாப்புக் குழுவொன்று இலங்கைக்கு இரகசிய விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.நாரயணன், பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் ஆகிய இந்தியப் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இருதரப்புப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிப்பதற்கு இந்தியா விஜயம் செய்திருந்தனர். இந்த விஜயத்தின் ஒர் தொடர்ச்சியாகவே இந்திய உயர்மட்டப் பாதுகாப்புக் குழுவினர் இலங்கை விஜயம் செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
இந்தியப் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளின் இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள சார்க் தலைவர்களின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவுள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் பாதுகாப்புச் சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உயர்மட்டக் குழுவினர் ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெருடல் இணையம்
|