|
சிறிலங்கா இராணுவத்திற்கு ஆட்திரட்டும் பணி தென்பகுதியில் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
இராணுவத்திற்கு இளைஞர்களை சேர்க்கும் அறிவித்தல்கள் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் பல பத்திரிகைகளிலும் அரசாங்க மற்றும் இராணுவ இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தகைய அறிவித்தல்களில் இளைஞர்களை இராணுவத்தில் சேர்ந்து கொள்ளுமாறு இராணுவத் தலைமையகம் அழைப்பு விடுப்பதாகவும், இராணுவத்தில் சேர்வதற்கு விரும்புபவர்கள் தமது ஆள் அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணங்களுடன் இராணுவ முகாம்களுக்கு வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களை மீண்டும் இணைக்கும் நோக்கில் அவர்களுக்கான இரண்டாம் கட்ட பொதுமன்னிப்பு காலத்தையும் இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
புதிதாக ஆட்திரட்டும் காலப்பகுதியையே தப்பியோடிய படையினருக்கான பொதுமன்னிப்பு காலமாகவும் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை முதலாம் நாள் முதல் செப்ரெம்பர் 30 ஆம் நாளுக்கும் இடையில் இராணுவத்தில் சேரவிரும்பும் புதியவர்களும் இராணுவத்தை விட்டு தப்பியோடிவர்களும் இணைந்து கொள்ளலாம் என்று அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இணைந்து கொள்பவர்கள் சாதாரண படைப்பிரிவிலோ அல்லது தொண்டர் படையணியிலோ சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தப்பியோடி மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்ட படையினரைக் கொண்டே அண்மையில் 61 ஆவது மற்றும் அதிரடிப்படை - 11 என்ற இரண்டு படையணிகளை உருவாக்கியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் இராணுவத்திற்கு புதியவர்களையும், தப்பியோடியவர்களையும் உள் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெறத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இராணுவத்திலிருந்து தப்பியோடிய 12,000 பேரை தேடிக்கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளையும் இராணுவத் தலைமையகம் முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா இராணுவத்தை விட்டு தப்பியோடிய 51,000 பேருக்கான ஒரு மாத பொதுமன்னிப்பு காலம் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் பொதுமன்னிப்புக் காலப்பகுதியில் சுமார் 5,000 இராணுவத்தினர் மட்டுமே மீண்டும் இணைந்துகொண்டனர்.
இதனையடுத்தே சுமார் 12,000 பேரையாவது தேடிக் கண்டுபிடிக்கும் சிறப்பு நடவடிக்கையை இராணுவத் தலைமையகம் ஆரம்பித்துள்ளது. இதனை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.
இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து ஆட்பற்றாக்குறை நிலவுவதாலேயே இத்தகைய நடவடிக்கைகளை இராணுவத் தலைமையகம் எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நெருடல் இணையம்
|