|
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான இராசதந்திரிகள் குழுவினரின் இலங்கைக்கான திடீர் பயணத்தின் நோக்கம் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விடயங்களே இவர்களின் வருகையின் முக்கிய கருப்பொருளாக அமைகின்றன.
சார்க் உச்சி மாநாட்டின் போது, வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தே இந்திய உயர் அதிகாரிகள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்திய உயர் அதிகாரிகளின் பாதுகாப்பு திட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்ததை அடுத்து இரு தரப்பினரிடையே பாகாப்பு உடன்பாடு ஒன்றும் கைச்சாத்திடப்பட்டதாகத் தெரியவருகிறது.
சார்க் உச்சி மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வருகின்ற போதிலும், இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இந்திய அரசு பொறுப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த உடன்பாட்டில் உள்ள இரு முக்கிய விடயங்கள்…
1. சார்க் உச்சி மாநாடு இடம்பெறும் காலத்தில் இந்தியக் கடற்படையினரால் இலங்கைத் தீவைச் சுற்றிலும் பாதுகாப்பு வழங்குவது.
2. சார்க் உச்சி மாநாட்டின் உள்ளகப் பாதுகாப்புக்காக 3000 இந்திய சிறப்பு பாதூகாப்பு படையினர் இலங்கையில் களமிறக்குவது.
மேற்கூறப்பட்ட விடயங்களே இந்திய உயர் அதிகாரிகளின் வருகையின் போது எட்டப்பட்ட உடன்பாடுகள் எனத் தெரியவருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (21-06-2008) அன்று இந்திய உயர் அதிகாரிகளான இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கே. நாராயணன், இந்திய வெளிவிவகாரச் செயலர் சிவசங்கர் மேனன், இந்திய பாதுகாப்புச் செயலர் சிறீ விஜே சிங் ஆகிய உயர் பீடத்தினரே கொழும்பு வந்தடைந்திருந்தனர்.
இந்தியாவுடனான எட்டப்பட்ட பாதுகாப்பு உடன்பாட்டுக்கு ஜேவிபி கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நெருடல் இணையம்
|