|
ஒரு வாரத்திற்குள் இரண்டாவது தடவையாக வவுனியாவில் சரத் பொன்சேகா |
|
|
|
Thursday, 26 June 2008 |
|
வன்னிக் களமுனைகளில் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள படையினரை நேற்று வியாழக்கிழமை காலை இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சென்று பார்வையிட்டுள்ளார்.
வவுனியாவுக்குச் சிறப்புப் பயணத்தினை மேற்கொண்டிருந்தபோதே காயமடைந்த படையினரைப் பார்வையிடுவதற்காக அவர் வவுனியா மருத்துவமனைக்குச் சென்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த படையினரைப் பார்வையிட்ட அவர், மருத்துவ அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தியுள்ளார்.
வவுனியா மருத்துவமனைக்கான பயணத்தினை முடித்துக்கொண்டு வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குச் சென்ற அவர் அங்கு வன்னி மாவட்ட இராணுவத் தளபதி மற்றும் வன்னிக் களமுனைத் தளபதிகளுடன் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறை ஆலோசனைகளையும் சரத் பொன்சேகா இச்சந்திப்பில் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்திப்பின் போது களமுனைகளில் உள்ள நிலவரம் குறித்து களமுனைத் தளபதிகள் சரத் பொன்சேகாவுக்கு விளக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
கடந்த ஒரு வாரத்திற்குள் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்கு சரத் பொன்சேகா மேற்கொண்ட இரண்டாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|