|
மன்னார் மாவட்டத்தில் உள்ள விடத்தல்தீவுக்கு கடந்த வாரம் ஊடுருவ முயற்சித்த சிறிலங்காவின் கொமோண்டோப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் பலியான படையினருக்கு அந்நாட்டு அரசாங்கம் பதவி உயர்வு வழங்கியுள்ளது.
இது தொடர்பில் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள விடத்தல்தீவு பகுதிக்குள் தலா நான்கு படையினரைக் கொண்ட சிறப்பு படையினரின் மூன்று குழுவினர் ஊடுருவ மேற்கொண்ட முயற்சி விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தோல்வியில் முடிவடைந்திருந்தது.
சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது கொமோண்டோ றெஜிமென்டடைச் சேர்ந்த பிரவோ கொம்பனியைச் சேர்ந்த இராணுவத்தினர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று குழுக்களையும் சார்ஜன் அசித பெரேரா, கோப்ரல் வணசிங்க, லயன்ஸ் கோப்ரல் இந்திக குமார ஆகியோர் வழிநடத்தியிருந்தனர்.
எனினும் விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் சார்ஜன் அசித பெரேரா, கோப்ரல் வணசிங்க ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர்.
விடுதலைப் புலிகளின் உக்கிரமான தாக்குதலைத் தொடர்ந்து பின்வாங்கிய படையினர் சார்ஜன் அசித பெரேராவின் உடலத்தை கைவிட்டு சென்றிருந்தனர். பின்னர் அவரது உடலத்தை விடுதலைப் புலிகள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கையளித்திருந்தனர்.
இத்தாக்குதலில் கொல்லப்பட்ட சார்ஜன் அசித பெரேரா, கோப்ரல் வணசிங்க ஆகியோருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அசித பெரேரா சார்ஜன் மேஜராகவும், வணசிங்க சார்ஜனாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் உயிர்தப்பிய லயன்ஸ் கோப்ரல் இந்திக குமார கோப்ரலாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன், வீர விக்கிரம விபூசன விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிய படைப்பிரிவை காப்பாற்ற அனுப்பப்பட்ட படைப்பிரிவில் கொல்லப்பட்ட கோப்ரல் ஆரியரட்ன சார்ஜனாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|