|
மனித உரிமைகளுக்கான பெரும் சவாலாக சிறீலங்கா திகழ்வதாக, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சேரா லுட்போர்ட் கூறியுள்ளார். இலண்டன் பொங்கு தமிழ் எழுச்சிப் பேரணியில்,
இன்று பங்கேற்று உரையாற்றிய தாராண்மைத்துவ சனநாயகக் கட்சியின், பிரித்தானியாவிற்கான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சேரா லுட்போர்ட் (Sarah Ludford), அழகான ஈழத்தீவில், கடந்த இரண்டு தசாப்தங்களில் எழுபதுனாயிரம் பேர் கொல்லப்பட்டு, இருபது இலட்சம் பேர் குடிபெயர்ந்துள்ள பொழுதும் தகுந்த நடவடிக்கைகளை உலக சமூகம் எடுக்கத் தவறியிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த வகையில், உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளுக்கான பெரும் சவால்களில் ஒன்றாக சிறீலங்கா திகழ்வதாகவும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சேரா லுட்போர்ட் சுட்டிக் காட்டியுள்ளார். எவ்வாறாயினும், தமிழ் மக்களின் அரசியல் - பண்பாட்டு அடையாளத்தை அங்கீகரிக்கும் வகையிலான அரசியல் தீர்வின் ஊடாகவே, இனப்பிரச்சினைக்கு தீர்;வை ஏற்படுத்த முடியும் என்றும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சேரா லுட்போர்ட் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில், தாராண்மைத்துவ சனநாயகக் கட்சியின் குடிசார் உரிமைகளுக்கும், நீதி விவகாரங்களுக்குமான பேச்சாளராகத் திகழும் சேரா லுட்போர்ட் Sarah Ludford பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில் வாழ்நாள் உறுப்பினராக அங்கம் வகிக்கின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.
நெருடல் இணையம்
|