|
சிறிலங்காவின் அடுத்த சனாதிபதியாக யார் தெரிவு செய்யப்பட்டால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்?. அன்றி அதுநோக்கி முன்னேற்றம் ஏற்படும் என்ற ஆய்வு பலர் மத்தியிலும் இன்று முக்கியமானதொன்றாகியுள்ளது. இது தேர்தலில் வாக்களிக்க விரும்புகின்ற மக்கள் மத்தியிலும் சரி, தேர்தலில் அக்கறை யற்றுள்ளவர்கள் மத்தியிலும் சரி கேட்கப்படும், அலசப்படும் ஒன்றாகவேயுள்ளது.
சனாதிபதித் தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிடினும் அதில் இரண்டு பிரதான கட்சிகள்ஃ கூட்டணிகளில் ஏதோ ஒன்றின் வேட்பாளரே வெற்றிபெறுபவர் என்பதில் சந்தேகமில்லை. ஆகையினால், இவ்விரு தரப்பினரதும் இனப்பிரச்சினை குறித்த நிலைப்பாடே - எந்தளவிற்கு தீர்வு குறித்து முன்னேற வாய்ப்புண்டு என்பதை வெளிப்படுத்தத்தக்கது. பிரதம வேட்பாளர்களில் ஒருவரான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தாம் யுத்தத்திற்குத் தயாராக இல்லை. தாம்; ஒரு யுத்த விரும்பியும் அல்ல எனக் கூறுவதோடு, இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்கின்றார். அதேவேளை யுத்தநிறுத்த உடன்பாட்டில் மாற்றம் வேண்டும் எனவும் கூறுகின்றார். ஆனால், மகிந்த ராஜபக்ஷ அரசியல் தீர்வு தொடர்பாக பேசி வரினும், அவரின் அரசியல் கூட்டாளிகள் இவ்விடயத்தில் இணக்கப்பாடானதொரு போக்கைக் கொண்டவர்களாக இல்லை. தீவிர வலதுசாரிப் போக்கைக் கைக்கொள்ளும் இக்கூட்டணிக்கட்சியினரில்;, ஒரு தரப்பினர் பேச்சுவார்த்தைகளையே நிராகரிக்கின்றனர். இன்னொரு தரப்பினர், யுத்த நிறுத்த உடன்பாட்டையே நிராகரிக்கின்றனர். இந்நிலையில், மகிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினை விடயத்தில் எவ்வாறு முன்னேறி வரமுடியும?;. சில நோக்கர்கள், தீவிர வலதுசாரிகளின் ஆதரவைப் பெற்று சனாதிபதி ஆகியபின் மகிந்த ராஜபக்ஷ தனது கொள்கைக்கு ஏற்ப ஆட்சி நடத்தலாம் என அபிப்பிராயம் கொண்டுள்ளனர். ஆனால், இது நடைமுறையில் சாத்தியப்பாடானதல்ல. ஏனெனில், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும், அவர் பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளி;லும் ஜே.வி.பி யையும், ஏனைய தீவிர அடிப்படைவாத சக்திகளையும் நம்பியே இருத்தல் வேண்டும். ஆகையினால், சனாதிபதியாகிய பின்னர் மகிந்த ராஜபக்ஷ தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளலாம் என எதிர்பார்ப்பதற்கு இல்லை. ஆகையினால், மகிந்த ராஜபக்ஷவினால் இனப்பிரச்சினை விடயத்தில் சிறிது தானும் முன்னேற முடியுமா? என்பது கேள்விக்குரியதே. இதேவேளை அடுத்த பிரதான சனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க கடந்த முறை பிரதமராக இருந்தபோது யுத்த நிறுத்த உடன்பாட்டைச் செய்தவர், ஆறு சுற்றுப் பேச்சுக்கள் ஆயினும் நடத்தியவர், மேலும் பேசுவதற்குத் தயார் என்ற நிலைப்பாட்டை வெளிப்;படுத்திவருபவர். ஆகையினால் சமாதான விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க மீது சிறிது நம்பிக்கை உருவாவது தவிர்க்க முடியாததே. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய நிலைப்;பாட்டில், பேச்சில் முன்னரில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெளிவாகவே தென்படுகின்றன. இவை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதற்கு இடையூறானவையாகவே மதிப்பிடத்தக்கவையாகும். இத்தகைய பேச்சுக்களில் இனப்பிரச்சினைத் தீர்விற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவும் பெறப்படும். தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படலாம். சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்;களுக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும் என்பவை முக்கியமானவையாகும். ஆனால், அது எந்தளவிற்குச் சாத்தியப்படானது என்பது கேள்விக்குரியதே. ஏனெனில் சிறிலங்காவில் சனநாயகம் இன்னமும் அந்தளவிற்கு உயர்ந்த பண்புகளைக் கொண்டதாக மாறவில்லை. எப்பொழுது அடுத்தவரின் காலை வாரலாம் பெரும்பான்மையைத் திரட்டலாம் என்ற நோக்கிலேயே செயற்படுபவையாகவுள்ளன. அடுத்ததாக ரணில் விக்கிரமசிங்க தமது தீர்வு போன்றவைகள் பேச்சுவார்த்தைகளின் பின்னர் மக்களின் கருத்துக் கணிப்பிற்கு முன்வைக்கப்படும் என்கிறார். அவ்வாறானால் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்வொன்றைச் சென்றடையாத வகையிலான வழிவகைகளைக்; கொண்டுள்ளார். ஏனெனில் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று இலங்கை தழுவிய கருத்துக்கணிப்பில் வெற்றிபெறும் என எதிர்பார்ப்பது மடத்தனமாகும். சுனாமி அனர்த்த மீள்கட்டமைப்பிற்கான பொதுக்கட்டமைப்பே விடுதலைப் புலிகளுக்கு தனி அரசைப் பெற்றுக்கொடுக்கும் எனப் பிரச்சாரம் செய்து அதனை முடங்கச் செய்த பேரினவாதிகளுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் எத்தகைய தீர்வுத் திட்டத்தையும் தோற்கடிக்கும் சக்தியுண்டு. இந்நிலையில் தற்போதைய அறிவிப்புக்கள் சார்ந்த கொள்கைகளுடன் யார் சனாதிபதியாக வந்தாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என எதிர்பார்ப்பது அறிவிலித்தனமானதாகவே இருக்கும். ஏனெனில் இவர்களே இனப்பிரச்சினைத் தீர்விற்கான முட்டுக்கட்டைகளையும் அறிவிப்புச் செய்பவர் களாகவுள்ளனர். ஈழநாதம்
|