|
ஒன்றுபட்ட சக்தியாக நாம் அணிதிரண்டு எமது தேசத்தின் விடுதலையை விரைவாக வென்றெடுப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
வட்டக்கச்சி கோட்ட போர் எழுச்சி மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது விடுதலைப் போராட்டம் மக்களின் ஆதரவோடு முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற ஒரு போராட்டம். இதற்காக அளப்பெரிய ஈகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் விடுதலைப் போராளிகளும் மக்களும் செய்துள்ளனர்.
கடந்த 35 ஆண்டுக்கு மேலாக எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்க எத்தனையோ சிங்களப் படைத்துறைத் தளபதிகள் காலக்கெடு விதித்திருந்தனர். அதேபோன்றுதான் இன்று சரத் பொன்சேகாவும் காலக்கெடு விதித்துள்ளார்.
எமது விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் பக்கபலமாக இருக்கின்றனர். இதுபோன்ற போர் எழுச்சிக்குழுக்கள் கடந்த காலங்களில் ஈட்டப்பட்ட பாரிய வெற்றிகளுக்கு வழி சமைத்துக்கொடுத்தன.
இந்தப் போர், போர் எழுச்சிக்குழுக்களானவை களமுனைகளில் பின்தளப் பணிகளை மேற்கொள்ளல் தொடக்கம் விழுப்புண்பட்ட போராளிகளை பராமரித்தல், பின்தளப் பணிகளுக்குச் செல்கின்ற குடும்பங்களை பராமரிக்கின்ற பணி என விடுதலைக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
எமது தேசத்தின் விடுதலையை விரைவாக வென்றெடுக்க தேசிய போர் எழுச்சிக்குழுக்களே பக்கபலமாக இருக்கும் என்றார் அவர்.
நெருடல் இணையம்
|