|
முல்லைத்தீவு மருத்துவமனை மீது சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல்: ஒரு வயது குழந்தை பலி- 16 பேர் |
|
|
|
Thursday, 07 August 2008 |
|
முல்லைத்தீவு மருத்துவமனை வளாகத்திற்குள் இன்று சிறிலங்காப் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒரு வயது குழந்தை பலியாகியுள்ளது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் மருத்துவமனை பணிப்பாளரின் மனைவி உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மருத்துவமனை, அரச அதிபர் இல்லம், மருத்துவர்கள் குடியிருப்பு ஆகியவற்றை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1:00 மணியளிவில் சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதலை நடத்தினர்.
இத்தாக்குதலில் மருத்துவமனையிலிருந்த ஒரு வயது குழந்தை அந்த இடத்திலேயே உயிரிழந்தது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை பணிப்பாளர் சண்முகராஜாவின் மனைவி திருமதி ரேணுகா உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையை அண்டிய நீராவிப்பிட்டி, உடுப்புக்குளம், குமரபுரம் மற்றும் தண்ணீரூற்று ஆகிய பிரதேசங்களிலும் நேற்றிரவிலிருந்து தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
முல்லைத்தீவின் கரையோரப் பகுதிகளை நோக்கி நேற்றும் நேற்று முன்நாளும் சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல்களை நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
நெருடல் இணையம்
|