|
இலங்கை அரசின் தடைகளால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி புரிய முடியவில்லை - ஐ.நா.சபை |
|
|
|
Saturday, 09 August 2008 |
|
இலங்கைப் படையினது தடைகள் காரணமாக வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிபுரிய முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களுக்கான உதவிகள் புரிவதற்குத் தம்மிடம் தேவையான பொருட்கள் இல்லை என ஐ.நா.சபையின் அகதிகளுக்கான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு, குடிநீர் சுகாதார உபகரங்கள் தற்காலிக குடில்கள் எரிபொருள் என்பன தமது கையிருப்பில் மிகவும் குறைவடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இவற்றை விடுதலைப் புலிகளின் நிருவாகப் பிரதேசங்களுக்குள் கொண்டு செல்வதற்குப் படையினரால் விதிக்கப்பட்டுள்ள கடுமையான தடைகள் காரணமாகத் தமது கையிருப்பை மீள்நிரப்ப முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று காலை ஜெனீவாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனத்தின் (UNHCR) பேச்சாளர் றொன் றெட்மொன்ட் (Ron Redmond) இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.
நெருடல் இணையம்
|