|
தாய்நாட்டைத் துண்டாடுவதற்கு ஒரு போதும் பயங்கரவாதிகளுக்கு இடமளிக்க மாட்டேன் -ஜனாதிபதி மகிந்த சூளுரை |
|
|
|
Friday, 15 August 2008 |
|
எனது உயிர் இருக்கும் வரையில் எனது தாய்நாட்டைத் துண்டாட இடமளிக்க மாட்டேன். இதில் ஏற்படும் எந்த ஒரு தடையையும் தகர்த்தெறியத் தயங்கமாட்டேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் முப்பத்தி இரண்டு குளங்களையும் அவற்றுடன் தொடர்புடைய கால்வாய்களையும் புனரமைப்புச் செய்யும் திட்டத்தினைப் பொலநறுவை பராக்கிரம சமுத்திரப் பகுதியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்நிகழ்வின் பின் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்,
எமது தாய்நாட்டைத் துண்டாடிக் கூறுபோட எத்தனித்து வந்த பயங்கரவாதக் குழுவுக்கு எதிராக எமது இராணுவ வீரர்கள் வீரதீரத்துடன் செயற்பட்டு வருவது எனக்கு மன மகிழ்ச்சியைத் தருகின்றது.
நான் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டபின் பல விட்டுக் கொடுப்புகளை வழங்கினேன். யுத்த நிறுத்தம் என்றொன்று பெயரளவில் இருந்ததே தவிர, அதனை விடுதலைப் புலிகள் மதித்து நடக்கவில்லை.
பல தடவைகள் திட்டமிட்டே இதனை மீறிச் செயற்பட்டார்கள். புலனாய்வுத்துறை அதிகாரிகளைக் கொலை செய்தார்கள். முக்கியமான படை அதிகாரிகளையும் கொலை செய்தார்கள். அப்போதும் நான் பொறுமை காத்தேன்.
இறுதியாக மாவிலாறுப் பகுதியில் ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்க முற்பட்டதே தற்போதைய நிலைக்கு பிரதான காரணமாகியது. விவசாயிகளின் வயல் நிலங்களுக்குச் செல்லும் நீரைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் விவசாய நிலங்கள் பல அழிவுற்றன. இச்சந்தர்ப்பத்திலேயே நாம் பொறுமையை இழந்தவர்களானோம்.
மாவிலாறு நீரைப்பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு நாம் இராணுவத்தைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் புலிகளுக்கெதிரான முதலாவது நடவடிக்கையினை வெற்றிகரமாக முன்னெடுத்து மாவிலாறுப் பகுதியை முற்று முழுதாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.
அதன்பின் கிழக்கு மாகாணம் முழுவதிலிருந்தும் புலிகள் விரட்டியடிக்கப்பட்டார்கள். இன்று வடக்கிலும் கிளிநொச்சிப் பகுதிக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள்.
யார் என்ன சொன்னாலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தினைக் கைவிடப்போவதில்லை.
எந்த ஒரு தடை ஏற்படினும் நாட்டை மீட்டே தீருவேன். இதில் யாரும் சந்தேகம் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லையென்றும் தெரிவித்தார்.
நெருடல் இணையம்
|