|
தமிழ் மக்கள் அனைவரும் போருக்கு தயாராக வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற போர் எழுச்சிக் குழுக்களின் சிறப்பு ஒன்றுகூடலில் கருத்துரை நிகழ்த்துகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழீழ விடுதலைப் போர் எழுச்சிகொண்ட காலகட்டத்தில் இந்த போர் எழுச்சி ஒன்றுகூடல் நடைபெறுவது சிறப்பாகும். விடுதலைப் போரின் நீண்ட பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் இப்போது நாம் வந்துள்ளோம்.
தமிழ்மக்கள் இன்று இடம்பெயர்ந்து சொல்லொண்ணா துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இடப்பெயர்வு வாழ்வு என்பது தமிழருக்கு புதிதல்ல. ஆனால் இடப்பெயர்வால் அனுபவிக்கின்ற துன்ப துயரம் மிகவும் கொடுமையானது.
தமது சொந்த இடங்களுக்கு மக்கள் செல்லவேண்டும் என்றால் எதிரியின் வன்பறிப்பில் உள்ள மண்ணை மீட்டு எமது மண்ணில் காலூன்றி நிற்கும் எதிரியை எமது மண்ணுக்கு உரமாக்க வேண்டும். இதற்கு அனைத்து தமிழ்மக்களும் தயாராகவேண்டும்.
சிறிலங்காவின் அனைத்து வளங்களையும் எதிரி போருக்குள் ஈடுபடுத்துகின்றான். தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்களப் படைகள் எதனையும் செய்யத் தயாரான நிலையில்தான் உள்ளது.
தற்போது பெண்கள் என்ற விம்பத்தை உடைத்தெறிந்து போராளி என்ற புதிய தோற்றத்துடன் கையில் ஆயுதம் ஏந்தி களமுனகளில் வீராவேசமாக எதிரிக்கு எதிராக தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றனர் தமிழீழப் பெண்கள்.
தமிழ் மக்கள் அனைவரும் இங்கு ஏதோ ஒருவிதத்தில் பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருக்கின்றனர். தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் களமுனையில் இருக்கின்ற உணர்வுடன் வாழ வேண்டும்.
அனைவரும் போருக்கு தயாராகவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். சிறிலங்காப் படைகள் தமிழ் மக்கள் மீது உலகத்தில் எங்குமில்லாதவாறு மனித அவலத்தை நிகழ்த்துகின்றது.
போராடினால்தான் தமிழ்மக்கள் உயிர்களையும் வாழ்கையையும் பாதுகாக்க முடியும். இதற்காக அனைவரும் தயாராக வேண்டும் தமிழ்மக்கள் அனைவரும் வீரியம் பெற்றவர்களாக செயற்பட்டு துன்பங்களை ஏற்படுத்தியவர்களுக்கு துன்பங்களைக் கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார் அவர்.
நெருடல் இணையம்
|