|
திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வானூர்தி இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.05 மணியளவில் அதிரடித்தாக்குதல் நடத்தியுள்ளன.
சேத விவரம் தொடர்பாக இதுவரை கிடைத்த தகவல்படி சிறிலங்கா கடற்படையினர் 18 பேர் காயமடைந்துள்ளனர். பிறிதொரு தகவலின் படி நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
விடுதலைப் புலிகளின் வானூர்தி துறைமுகத்தினுள் இரண்டு குண்டுகளை வீசியுள்ளன என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலினால் அங்கு பாரிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை தீர்த்தனர் என்றும் -
குறிப்பிட்ட சில நிமிட நேரமாக துறைமுகப் பகுதியிலிருந்து பயங்கர வெடியோசைகள் கேட்டதாகவும் -
திருகோணமலை துறைமுகப் பகுதியிலிருந்து வாகனங்கள் வேகமாக சென்று வந்துகொண்டிருப்பதாகவும் - அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருகோணமலைக்கான தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. துறைமுகத்தை அண்டிய பிரதேங்கள் எங்கும் பதற்றம் நிலவியது.
இதேவேளை, தாக்குதல் நடத்தி விட்டுச்சென்ற விடுதலைப் புலிகளின் வானூர்திகளை கலைத்துச்சென்று தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வன்னிப் பகுதிக்கு விரைந்துள்ளன என்று வவுனியா தகவல்கள் தெரிவித்தன.
வவுனியா வான் பரப்பிற்கு மேலாக வன்னி நோக்கி தொடர்ச்சியாக சிறிலங்கா வான்படை வானூர்திகள் சென்றுகொண்டிருப்பதாக அவை மேலும் தெரிவித்தன.
ஜெட்லைனர் மீது தாக்குதல் என்று கடற்படை தெரிவிப்பு
திருகோணமலை கடற்படை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணத்துக்கு படையினரை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் 'ஜெட்லைனர்' என்ற துருப்புக்காவி கப்பல் இன்று திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்றது. படையினரை ஏற்றிச்செல்ல ஆயத்தமாக நின்றவேளை அதனை இலக்குவைத்தே விடுதலைப் புலிகளின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளின் வானூர்தி கடல்பக்கமாக இருந்து தாழப்பறந்து வந்து மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து திருகோணமலை கடற்படை தலைமையகம் மற்றம் சீனன்குடா வான்படைத்தளம் ஆகியவற்றிலிருந்து வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்குதல் நடப்பட்டது. எனினும் அது தப்பிவிட்டது.
தாக்குதல் இடம்பெற்ற நேரம் இருள் கவிழ்ந்து கிடந்ததால் விடுதலைப் புலிகளும் இலக்கை சரியாக தாக்கவில்லை. படையினரும் புலிகளின் வானூர்தியை தாக்கமுடியாமல் போய்விட்டது என்று அவை தெரிவித்தன.
நெருடல் இணையம்
|