|
கிழக்கில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது-பிள்ளையான்குழுவினர் |
|
|
|
Wednesday, 27 August 2008 |
|
கிழக்குமாகாண மக்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பக்கமே உள்ளதாக முதன்முதலாக ஏற்றுக்கொண்டுள்ளனர் ஒட்டுக்குழுவான பிள்ளையான்குழுவினர்.
கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக மீட்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்க கூறிவருகின்றபோதும், கிழக்கில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் பிள்ளையான்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக விடுதலைப் புலி புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என பிள்ளையான்குழுவின் பேச்சாளர் ஆசாத் மௌலானா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.
கஞ்சிகுடிச்சாறு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பாதுகாப்புத் தரப்பினர் கடும் நடவடிக்கை எடுத்திருப்பதால் பாரிய அச்சுறுத்தல் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பிள்ளையான்குழுவினரை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகளின் முயற்சிகள் தடுக்கப்பட்டிருப்பதாக மௌலானா கூறினார்.
"இது ஒரு பிரச்சினைக்குரிய விடயமோ, அல்லது எமக்கு அச்சுறுத்தலான விடயமோ அல்ல. ஆனால் இதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடனடி நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளவேண்டும்"என்றும் ஆசாத் மௌலானா கூறினார்.
கிழக்கு விடுவிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்புப் படையினருக்கும் பிள்ளையான்குழு உறுப்பினர்களுக்குமிடையில் பிரிவினையை உண்டுபண்ணக்கூடிய வகையிலான தாக்குதல் சம்பவங்களை புலிகள் நடாத்தி வருவதாகவும் ஆசாத் மௌலானா குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் மக்களோடு மக்களாக கலந்திருந்தே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாகவும் ஆசாத் மௌலானா குறிப்பிட்டார்.
நெருடல் இணையம்
|