|
இனியபாரதியே உணவு கொடுத்த தாயை சுட்டுக்கொன்றார் – உள்ளுர் மக்கள் |
|
|
|
Thursday, 04 September 2008 |
|
தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதிகளுள் ஒருவரான ஸ்டாலினின் தாயார், சிறீலங்கா துணைப்படைக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயாரான 60 அகவையுடைய அன்புமலர் என்பவரே நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அம்பாறை, கல்முனை பாண்டிருப்பு சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள இவரது வீட்டிற்குச்சென்ற துணைப்படைக் குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.சம்பவ இடத்திற்குச்சென்ற கல்முனையில் நிலைகொண்டுள்ள காவல்துறையினர், விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடலத்தை கல்முனை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். அம்பாறை மாவட்ட துணைப்படை T.M.V.P குழுவின் பொறுப்பாளரும், சிறீலங்கா அரசுத் தலைவரது மாவட்ட இணைப்பாளருமான இனியபாரதி என்பவரே இந்தக் கொலையைப் புரிந்திருப்பதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் அம்பாறை செய்தியாளர் தெரிவிக்கின்றார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஸ்ராலினின் தயார் வீட்டிற்குச் சென்ற இனியபாரதி, அவரை மாவட்டத்தைவிட்டு வெளியேறிச் செல்லுமாறு எச்சரிந்திருந்ததாகத் தெரிகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து செல்வதற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தளபதி ஸ்ராலினுடன், அவரது வீட்டிற்கு பல தடவை சென்றிருந்த இனியபாரதி, அவரது கையால் உணவு உட்கொண்டுவிட்டு, உணவு கொடுத்து வளர்த்தவரையே சுட்டுக்கொன்றிருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இனியபாரதியின் அச்சுறுத்தல் காரணமாக இன்று மாலை இடம்பெற்ற தளபதி ஸ்ராலினின் தாயாரின் இறுதி நிகழ்வில் மக்கள் கலந்துகொள்ள அச்சம் தெரிவித்திருந்தனர். தளபதி ஸ்ராலினின் தாயாரின் உடலம் முச்சக்கர ஊர்தியிலே எடுத்துச்செல்லப்பட்டதாக எமது அம்பாறை செய்தியாளர் தெரிவித்தார்
நெருடல் இணையம்
|