|
புலிகளின் பாரிய படகு தாக்கப்பட்டதாக சிறிலங்கா அரசு பொய்ப் பிரச்சாரம் |
|
|
|
Thursday, 04 September 2008 |
|
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய படகினை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா வான்படை தரப்பால் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று கொழும்பில் உள்ள இராணுவ ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
நாச்சிக்குடா மற்றும் வன்னேரி ஆகிய இடங்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்களை மூடி மறைப்பதற்காகவும் சிங்கள, ஆங்கில ஊடகங்களை திசை திருப்புவதற்காகவும் முல்லைத்தீவில் படகு தாக்கப்பட்டது எனும் பொய்ப்பிரச்சாரத்தில் சிறிலங்கா வான்படை ஈடுபட்டிருக்கலாம் எனவும் அந்த இராணுவ ஆய்வாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் வான் தாக்குதல் நடைபெற்றிருப்பதனை உறுதிப்படுத்திய சிறிலங்கா வான்படை அதிகாரி ஒருவர், புலிகளின் படகு தாக்கியழிக்கப்பட்டதா என்பது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் பாரிய படகு தாக்கியழிக்கப்பட்டதாக சிறிலங்கா வான்படையால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.
நெருடல் இணையம்
|