|
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை ஆகாய, தரைவழி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகள் தரைவழியாகவும் ஊடுருவி படைத் தலைமையகம் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இவர்களுக்கு உதவியாக விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலையும் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலையும் நடத்தினர்.
விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வன்னியிலிருந்து வவுனியா படைத் தலைமையகம் மீது கடுமையான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலில் படைத் தலைமையகத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், முழுமையான விபரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.
கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி 11 படையினர் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவர் என்றும் 15 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்களில் 5 பேர் வான்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு இந்திய அரசு வழங்கிய இந்திரா இரு பரிமாண ராடர்கள் இருந்த கட்டடத் தொகுதிக்கே விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியதாகவும், இந்திரா ராடர்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் அதனை இயக்கிக்கொண்டிருந்த இந்திய நாட்டைச் சேர்ந்த இரு பொறியியலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் உடனடியாக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களுக்கான சிகிச்சை வசதிகளை இந்தியத் தூதரகம் தீவிரமாக ஏற்பாடு செய்து வருவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் 10 உடலங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா வான்படைத் தளபதி ரொசான் குணதிலக்க அனைத்துலக ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவிலேயே விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் வவுனியா சிறிலங்கா படை கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசிப்பதை ராடர்கள் மூலமாகத் தாம் கண்டு உணர்ந்ததாக படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்தன.
இதனையடுத்து பதில் தாக்குதலை நடத்துவதற்காக சிறிலங்கா வான்படை உடனடியாக உயர்விழிப்பு நிலைக்கு உட்படுத்தப்பட்டது.
கட்டுநாயக்க வானூர்தி தளத்திலிருந்து சிறிலங்கா வான்படையின் தாக்குதல் வானூர்திகள் இடைமறித்துத் தாக்குதலை நடத்துவதற்காக உடனடியாகவே வவுனியாவுக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில் வவுனியாவுக்குள் பிரவேசித்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய படைத் தலைமையகத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்தின.
இரண்டு வானூர்திகளிலிருந்தும் நான்கு குண்டுகள் வான்படைத் தளத்தின் மீது போடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளையில், வன்னியிலிருந்தும் இத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான எறிகணைகள் படைத்தலைமையக பகுதிக்குள் வீழ்ந்து வெடித்ததாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதல்களால் இன்று அதிகாலையில் அரை மணித்தியாலத்துக்கும் அதிகமாக வவுனியா நகர் அதிர்ந்துகொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தாக்குதலை நடத்தியபோது படை முகாமிலிருந்து தொடர்ச்சியாக வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிகளும், துப்பாக்கிகளும் வானை நோக்கி தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தமையால் வான்பரப்பு ஒளிப்பிளம்பாகக் காணப்பட்டது என வவுனியா மக்கள் தெரிவித்தனர்.
இத்தாக்குதல்களால் எழுந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களால் வவுனியா நகர மக்கள் அதிகாலையிலேயே பெரும் அச்சத்துடன் எழுந்துவிட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா நகர் பகுதியில் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று சிறிலங்கா படைத்தரப்பு அப்பகுதி மக்களை எச்சரித்திருப்பதனால் அங்கு அதிகாரபூர்வமற்ற ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளையில், தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகளில் ஒன்றை தமது வானூர்திகள் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தியதாக சிறிலங்கா வான்படை பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது தாக்குதல் வானூர்திகள் துரத்திச் சென்றதாகவும், முல்லைத்தீவு காட்டுப் பகுதிக்கு மேலாகச் சென்றுகொண்டிருந்த போது அவற்றில் ஒன்றைத் தாம் சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான தடயம் எதுவும் தமது ராடர் திரையில் பதிவாகவில்லை என இந்திய தரப்பு கூறியதாக கொழும்பில் உள்ள இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை
நெருடல் இணையம்
|