|
வன்னி தாக்குதல் - தலைமையக கட்டிடம் அழிப்பு – றாடர் நிலையம் செயலிழப்பு – புலிகளின் 115 எறிகணைகள் வீழ் |
|
|
|
Tuesday, 09 September 2008 |
|
வவுனியாவில் உள்ள படைத் தலைமையகத்தில் சிறிலங்கா விமானப்படையினருக்காகக் கடமையாற்றிக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ராடர் இயக்குனர்களும் விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலில் காயமடைந்துள்ளார்கள்.
காயமடைந்த இருவரும் உடனடியாகக் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிய வருகின்றது. படைத்தரப்புத் தகவல்களின்படி பத்துப் படையினரும் பொலிஸார் ஒருவரும் இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர் என்றும் விடுதலைப்புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் பத்து சடலங்களைத் தாம் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தவிரவும் 15 படையினரும் 8 பொலிஸாரும் 5 விமானப்படையினரும் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் போது வன்னியில் இருந்து 115 எறிகணைகளை புலிகள் வீசியதாகவும் அவை அனைத்தும் ஜோசப் முகாம் பகுதியைச் சுற்றி வீழ்ந்ததாகவும் வவுனியாவின் எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முகாம் பகுதியில் அமைந்திருந்த முகாமின் தலைமைக் கட்டிடம், ராடர் நிலையம் என்பன முற்றாக சேதம் அடைந்ததுடன் இலங்கை விமானப்படையின் இரண்டு விமானங்களும் சேதம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை கட்டுநாயக்காவிலிருந்து புறப்பட்ட இரண்டு தாக்குதல் விமானங்கள் வவுனியாவில் குண்டு வீசி விட்டுச் சென்ற புலிகளின் இரண்டு விமானங்களைக் கண்டதாகவும் அவற்றில் ஒன்றை முல்லைத்தீவில் தரையிறங்கும் போது சுட்டு வீழ்த்தியதாகவும் படைத்தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் அவ்வாறாக விமானம் ஏதும் வீழ்ந்ததாக அறியக்கிடைக்கவில்லை என வன்னித்தரப்புச் செய்திகள் தெரிவி;கின்றன. மறுபறத்தில் புதுக்குடியிருப்பில் மக்கள் செறிவாக வாழும்பகுதிகளிலும் பூநகரியிலும் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடாத்தியுள்ளதாக அறியக் கிடைக்கிறது.
இதேவேளை புலிகள் அதிகாலை 2.30 மணியளவில் வான் தாக்குதலை நடாத்தியதும் மும் முனைகளிலிருந்து சிறிலங்காவின் படைத்தளத்தை நோக்கி ஆட்லறி செல் வீச்சு புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. புலிகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் விமானப்படையின் இரண்டு விமானங்களும் ராடர் தொகுதியும் சேதமுற்றதாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.
நெருடல் இணையம்
|