|
புலிகளின் தாக்குதலை ஆராய வவுனியா வரவுள்ள இந்திய இராணுவ நிபுணர் குழு |
|
|
|
Tuesday, 09 September 2008 |
|
வவுனியா சிறிலங்கா படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலை புலிகள் இன்று அதிகாலை நடத்திய ஆட்லறி மற்றும் வான் தாக்குதல்களினாலான மரபு வழி தாக்குதலில் இந்தியா வழங்கிய இந்திரா ராடர் அதற்கான கட்டுப்பாட்டு அறை ஆகியவை சேதமடைந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய இராணுவ பொறியியல் தொழில்நுட்பவியலாளர் குழு ஓன்று கொழும்புக்கு வரவுள்ளதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சிறிலங்கா வான்படைக்கு புதிய ராடர் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்தும் சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் இக்குழு பேச்சு நடத்தவுள்ளதாகவும் இந்திய தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
வவுனியா படைத் தலைமையகம் அமைந்துள்ள ஜோசப் இராணுவ முகாமின் ராடர் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த இரண்டு இந்திய வான்படையின் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்கள் காயமடைந்தமை குறித்தும் இக்குழு விபரங்களை பெற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, இக்குழு வவுனியாவுக்குச் சென்று சம்பவ இடத்தை பார்வையிடுவதுடன் தாக்குதல் இடம்பெற்றவேளை கடமையிலிருந்த உயர் அதிகாரிகளை சந்தித்து நிலைமையை அறிந்து கொள்ளும் என்றும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகமோ, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சோ இக்குழுவின் கொழும்பு வருகை தொடர்பில் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
தமிழர் தாயமான வடக்கு - கிழக்கு உட்பட சிறிலங்காவில் இந்திய நாட்டைச் சேர்ந்த 265 இராணுவ பொறியியல் தொழில்நுட்பவியலாளர்கள் கடமையாற்றுவதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெருடல் இணையம்
|