|
வான் பாதுகாப்பு அவதானிப்புக்கள் கட்டுநாயக்க ராடர் நிலையத்துக்கு மாற்றம் |
|
|
|
Thursday, 11 September 2008 |
|
வவுனியாவில் உள்ள பிரதான கட்டளையிடும் சிறிலங்கா படை முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறி எறிகணை மற்றும் வானூர்தி தாக்குதல்களிலான மரபு வழி தாக்குதலை அடுத்து சிறிலங்கா தலைநகர் கொழும்பின் வான் மார்க்கமான எல்லை பாதுகாப்பு அவதானிப்புக்கள் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தில் உள்ள ராடர் கருவிகள் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக படைத்தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த இந்தியாவின் இந்திரா ராடர் கருவிகள், சிறிலங்கா படைத்தரப்பின் ஆகாய எல்லைக்குள் புலிகளின் வானூர்திகள் உள்நுழைவதை துல்லியமாக மதிப்பிடுவதில் முக்கிய பங்காற்றி வந்தன.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற புலிகளின் மரபு வழி தாக்குதலில் அவை சேதமடைந்ததால் தலைநகர் கொழும்பின் வான் மார்ர்க்கமான எல்லை பாதுகாப்பு கண்காணிப்பு விடயத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாகவே தற்காலிகமாக கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தில் உள்ள ராடர் கருவிகள் மூலமாக வான் எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்
அதேவேளை, அரச தலைவர் செயலகம், நாடாளுமன்ற கட்டடம் உட்பட கொழும்பில் உள்ள முக்கியமான நிலைகள் மீது பொருத்தப்பட்டிருந்த வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை கருவிகள் கடந்த இரண்டு நாட்களாக மீளவும் சரிபார்க்கப்பட்டு மேலதிகமான பாதுகாப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த படை முகாம் மீதான புலிகளின் மரபு வழி தாக்குதலின் பின்னர் படைத்தரப்பு வான் எல்லை பாதுகாப்பை அவதானிப்பதில் சிறிலங்காவின் வான்படை நிபுணர் குழு ஒன்று சிறப்பாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெருடல் இணையம்
|