|
தலைவரின் வல்வெட்டித்துறை வீடு சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதம் |
|
|
|
Friday, 12 September 2008 |
|
யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு நேற்று முன்நாள் நண்பகல் சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் தனக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டுக்கு நேற்று முன்நாள் புதன்கிழமை நண்பகல் சென்ற சிறிலங்கா இராணுவ அணியொன்றே வீட்டை இடித்து சுவர்களை உடைத்ததுடன் ஜன்னல் நிலைகளையும் கதவு நிலைகளையும் உடைத்து அவற்றை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று முன்நாள் நண்பகல் அப்பகுதியில் இராணுவ வாகனத் தொடரணி செல்வதற்காக பொதுமக்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நேரத்திலேயே இராணுவத்தினர் இந்த வீட்டை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.
இராணுவ வாகனத் தொடரணி சென்ற பின்னர் அந்த வீதியால் மக்கள் சென்ற போது புலிகளின் தலைவரின் வீடு இடித்து உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருப்பதை அவதானித்து தனக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
நீண்டகாலமாக இந்த வீட்டில் எவரும் இல்லாத போதும் அப்பகுதி மக்கள் இந்த வீட்டை பராமரித்து வந்தனர். சிறிது சேதமுற்றிருந்த போதும் நேற்று முன்நாள் இராணுவத்தினர் அதனை இடித்து உடைத்து பலத்த சேதமாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நெருடல் இணையம்
|