|
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான செயற்பாடுகள் எந்தக் கட்டத்தில் உள்ளன? இதில் முன்னேற்றம் காணக்கூடியதான எத்தகைய சமிக்கைகளும் தென்படுகின்றனவா? அதாவது யுத்த நிறுத்த உடன்பாடு எந்தளவிற்கு உறுதியானதாகவுள்ளது? சமாதானப் பேச்சுவார்த்தைகளும்- அரசியல் தீர்வு முயற்சிகளும் எந்தளவில் உள்ளன? என்பதே இங்கு எழுப்பப்படும் வினாவாகும்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காணவேண்டும் என்பதில் இன்று பல உலக நாடுகள் அக்கறை காட்டுகின்றன. இதில் குறிப்பாக மேற்குலக நாடுகளின் அக்கறை அதிகமானதாக உள்ளது. இந்நாடுகள் யுத்தம் நிறுத்தப்பட்டு, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஒரு வகையில் இந்நாடுகள் அழுத்தங்களையும் பிரயோகிக்கின்றன என்று கூடக் கூறலாம். இதேவேளை இந்நாடுகளின் நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையிலான செயற்பாடுகளில் விடுதலைப் புலிகளும் கணிசமான ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளனர் என்பதை எவருமே நிராகரித்துவிட முடியாது. அதாவது யுத்த நிறுத்த உடன்பாடு, அதன் அமுலாக்கம் ஆகியவற்றுக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பில் இருந்து சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராக உள்ளமை வரையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆயினும் மேற்கு நாடுகளிலிருந்து சில நெருக்குதல்கள் வராமலில்லை. குறிப்பாக, சில நாடுகள் புலிகள் மீது விடுத்துள்ள தடை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமது நாடுகளில் வரவேற்பதில்லை என்று எடுத்துள்ள தீர்மானம் ஆகியவற்றைச்; சுட்டிக்காட்ட முடியும். ஆனால் இவை ஒரு தலைப்பட்சமானவை. அவ்வாறு இல்லாதுவிடில் விடுதலைப் புலிகள் மீதான இத்தகையதொரு அழுத்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் தற்பொழுது மேற்கொண்டமைக்கான காரணம்தான் என்ன? இலங்கை இனப்பிரச்சினை சர்வதேச மட்டத்தை எட்டியிருப்பது இனப்பிரச்சினையின் கூர்மையை வெளிப்படுத்துவதாக இருப்பினும், இப்பிரச்சினை தொடர்பான சரியான புரிதலை மேற்குலக நாடுகள் கொண்டுள்ளனவா என்பதே இன்றுள்ள முக்கியமான கேள்வியாகும். ஏனெனில் அவர்களின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பவையாக இல்லை. மாறாக, ஒடுக்குமுறை சக்திகளை வலுப்படுத்து பவையாகவே உள்ளன. தமிழ் இளைஞர்கள் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளின் மத்தியில் ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டி வந்தமை ஏதோ சந்தர்ப்பவசத்தின் செயற்பாடுகளினால் அல்ல. அதாவது தமிழ்மொழி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டமை, தமிழ் மக்களின் தாயகம் ஆக்கிரமிக்கப்பட்டமை, வேலை வாய்ப்பு கல்வி என்பவற்றால் புறக்கணிக்கப்பட்டமை போன்ற பல்வேறு காரணிகளும் இரு தசாப்தகால சாத்வீகப் போராட்டத் தோல்வியும் ஆயுதப் போராட்டம் ஒன்றை நடத்துவதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை என்ற நிலையைஉருவாக்கி இருந்தது. மேலும் இதன் அவசியத்தை 1977 ஆம், 1983 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்கள் மீது, கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரிய வன்முறைகள் தமிழ் மக்களுக்கு உணர்த்தின. இதனால் தமிழ் மக்களும் ஆயுதப் போராட்டமே தமது விடிவிற்கான வழி என உறுதியாக நம்பினர். இதன் வெளிப்பாடே பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டங்களில் இணையவும், ஆயுதம் ஏந்தவும் வேண்டியநிலை உருவானது. ஆனால், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இவ் ஒடுக்குமுறையை மேற்குலக நாடுகள் எந்தளவிற்குப் புரிந்துகொண்டன என்பது கேள்விக்குரியதே. அவ்வாறு அவர்கள் புரிந்து கொண்டிருப்பின் இனக்கலவரங்கள் மூலமும் அதன் பின்னான அரச பயங்கரவாதத்தின் ஊடும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்குமுறைகளைப் புரிந்துகொண்டு இப்பிரச்சினையில் நடுநிலையானதொரு நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால், இவற்றின் பின்னர் நடந்த நீண்டதொரு யுத்தமும்-தமிழ் மக்களின் பெரும் அர்ப்பணிப்பின் பின்னருமே சர்வதேச சமூகம் இனப்பிரச்சினையில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியது. யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு, இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தன. இருப்பினும், அதன் பின்னரும் கூட இந்நாடுகள் நடுநிலையான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனவா? என்ற கேள்வியே இன்று தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. அதாவது ஒடுக்குமுறை அரசு தமக்குரிய இராஜாங்க அந்தஸ்;து, வசதிகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளும் நகர்வுகள், உண்மைக்கு மாறான பிரச்சாரங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்களை மேற்கொள்வதாகத் தெரிகின்றது. அவ்வாறு இல்லாது விட்டால் இன்று யுத்தநிறுத்த உடன்பாடு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமைக்கும், சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட முடியாமல் இருப்பதற்கும் யார் காரணம் என்பதை அவை புரிந்துகொள்ளுதல் கடினமாக இருக்க மாட்டாது. அத்தோடு ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையும் மேற்கொள்ளவாய்ப்பில்லை. அதாவது பலமான நிலையிலுள்ள அரசின் ஒடுக்குமுறைக்கு பலவீனமானதொரு மக்கள் கூட்டம் தம்மால் இயன்றதொரு வழிமுறையில் பதில் அளிப்பதை இவ் அரசுகளினால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அரசு புரியும் ஒடுக்குமுறை சிறுபான்மை இனங்களின் அடிப்படை மனிதஉரிமைகள், சனநாயக உரிமைகள், சிறுவர் உரிமைகள் என்பவற்றைப் பாதிப்பவையாக மட்டுமல்ல, அவர்களின் உயிர் வாழ்தலையே கேள்விக்குள்ளாக்குபவையாக இருந்த போதும் உலகத்தால் அவை கண்டு கொள்ளப்படவில்லை என்பதே நிதர்சனமானதாக இருந்தது. இத்தகையதொரு நிலையிலும், உரிமைக்காகப் போராடும் மக்கள் கூட்டத்தின் மீதும், அதற்கு வழிகாட்டும் விடுதலை அமைப்பின் மீதும் அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் அவை கவனம் செலுத்துகின்றன. இத்தனைக்கும் ஒடுக்குமுறை அரசுகள் இந்நாடுகளின் கோரிக்கைகளுக்கு, அழுத்தங்களுக்கு செவிசாய்ப்பனவாகவோ அன்றி பணிந்து போகின்றனவாகவோ இல்லை. எடுத்துக்காட்டாக சிறிலங்கா அரசு யுத்த நிறுத்தத்தை சீராக அமுல் செய்தல் வேண்டும். குறிப்பாக துணை இராணுவக் குழுக்களை கலைக்கவேண்டும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை அவை காதில் வாங்கிக்கொள்வதாக இல்லை. சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட பின்னர் வெளிநாடுகளில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. சுனாமி அனர்த்தத்தின் பின்னர் உலக நாடுகளின் பெரும் முயற்சியினால் பொதுக்கட்டமைப்பு ஒன்றும் ஏற்பட்டது. ஆனால் இவற்றால் என்ன பயன்? தமிழ் மக்களுக்கு இவற்றால் பயன் ஏதும் கிட்டவில்லை. யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தும் தமிழ் மக்கள் தமது இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்ப முடியவில்லை. அவர்களுக்கு யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்;களுக்கு நிவாரணம் கிட்டவில்லை. அவர்களின் அரசியல் உரிமைகள் கிடைக்கப்பெறவில்லை. இதே போன்றே சுனாமிப் பேரலைகள் தாக்கிய பின்னரான புனரமைப்பிற்கான பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டும் பயன் இல்லை. ஏனெனில் அது அமுலாக்கம் செய்யப்பட்டதாக இல்லை. இவை யாவும் ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட முட்டுக்கட்டைகளினாலேயே அமுலாக்கம் செய்யப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததொன்று. இது மாத்திரமன்றி தற்பொழுது பேச்சுவார்த்தைகள்; ஆரம்பிக்கப்பட வேண்டும் என மேற்கு நாடுகள் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சிறிலங்கா ஆட்சியாளர்களில் யாருடன் பேசுவது? அதாவது சனாதிபதி சந்திரிகாவுடன் பேசுவதா? அன்றி பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் பேசுவதா? அடுத்ததாக எதைப்பற்றிப் பேசுவது? யுத்த நிறுத்தத்தைப் பற்றிப் பேசுவதா? அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதா? இவற்றில் அரசாங்கத் தரப்பில் உள்ளோரிடத்தில் ஒத்த கொள்கை ஏதாகிலும் உண்டா? இக்கேள்வியானது தேர்தல் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு கேட்கப்படும் ஒன்றல்ல அடிப்படையிலேயே சிங்கள ஆட்சியாளர்களிடம்ஃ அரசியல் வாதிகளிடம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஒருமைப்பாடானதொரு நிலைப்பாடு இல்லை. இவை யாவும் புரிந்து கொள்ளப்படாமலே ஒடுக்கப்பட்ட நிலையிலுள்ள தமிழ் மக்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்படுகின்றனர். அன்றி சிறிலங்கா அரசாங்கத்தின் இராஜதந்திர செயற்பாடுகள் மற்றும் பிரச்சாரம் என்பவற்றின் காரணமாக உணரப்படாமல் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா? உலகில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் யாவற்றின் போதும், ஒடுக்குமுறைகளுக்கே பெரும்பாலான உலக நாடுகளின் அங்கீகாரமும், ஆதரவும்; கிடைக்கப்பெற்றுள்ளமை வரலாறு. கெடுபிடி யுத்த காலத்தில் ஒடுக்கப்பட்டோருக்கான ஆதரவு எதிரியின் நண்பனுக்கு எதிர் என்ற ரீதியில் கிடைக்கப்பெற்றாலும் அவை வெளிப்படையானவையாகவோ, பலமானவையாகவோ இருந்ததில்லை. ஆனால், ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வெற்றி கண்ட மக்கள் தமது வெற்றியின் மூலதனமாக எப்பொழுதும் போராட்டத்தின் மீதான தமது உறுதியையும், பற்றுதலையும் கொண்டிருந்தமையே வெற்றிக்குக் காரணமாகும். அத்தோடு, வெற்றி உறுதிப்படுத்தப்படும் வேளையிலேயே சர்வதேச அங்கீகாரமும் இணைந்து வந்துள்ளமையே வரலாறாகும். ஆகையினால் தமிழ் மக்கள் தற்பொழுது வெளிப்படுத்தும் போராட்டத்தின் மீதான பற்ருறுதியும், வெளிப்படுத்தும் எழுச்சியுமே அவர்கள் மீதான ஒடுக்குமுறையை உடைத் தெறியவும் எமது போராட்டத்தின் மீதான அழுத்தங்களைத் தாண்டி வெற்றிபெற வாய்ப்பளிப்பதாக இருக்கும்;. தமிழ் மக்கள் தமது உரிமைகள் குறித்து மிகவும் தெளிவான புரிதலைக் கொண்டவர்களாகவே உள்ளனர். இதற்கான எத்தகைய அர்ப்பணிப்புக்களும் அவர்கள் செய்யத் தயாராகவுள்ளனர். கடந்த காலத்தில் இதனைச் செய்துமுள்ளனர். ஏனெனில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமானது நியாயப்பாடானதும், தார்மீக ரீதியில் பலம் மிக்கதும் ஆகும். ஆகையினால், இப்போராட்டம் பெறும் வெற்றியை உலகம் அங்கிகரித்தே ஆக வேண்டியிருக்கும்.
வேலவன்
|