|
இலங்கை தமிழர்கள் மீதான இராணுவ தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்,இலங்கை ராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கக்கூடாது, இனப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.ஆனால் இந்த உண்ணாவிரதத்தில் தமிழகம் முழுவதும் பங்கேற்கப் போவதாகஅறிவித்திருந்த அதிமுக திடீரென புறக்கணிப்பு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ள தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் அதிமுக,தேமுதிக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டன.சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரத பந்தலை நோக்கி ஏராளமான பொது மக்கள் திரண்டனர்.உண்ணாவிரத பந்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா,மாநில செயலாளர் தா.பாண்டியன்,இணைசெயலாளர் சி.மகேந்திரன்,தேமுதிக சார்பில் முன்னாள் அமைச்சரும்,இலங்கை தமிழர் பிரச்சனையை ஐ.நா.சபையில் ஒலிக்க செய்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டபிள்யூ ஆர்.வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.அவருடன் தேமுதிக தொண்டர்கள் தங்கள் கொடிகளுடன் பெருமளவில் கலந்து கொண்டார்கள். மேலும் இளைஞரணியினர் மஞ்சள் சீருடையில் வந்திருந்தார்கள்.எங்கு பார்த்தாலும் தேமுதிக வின் கொடிகள் காட்சி அளித்தன.அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதே போல தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. உண்ணாவிரதம் தொடங்கிய போது சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னணியினர் பங்கேற்றனர்.முத்துசாமி இப்போது வருவார்,சற்று நேரத்தில் வருவார் என்று கூறப்பட்டது.ஆனால் திடீரென்று அதிமுக முன்னணியினர் மற்றும் தொண்டர்கள் அங்கிருந்து நழுவ ஆரம்பித்தார்கள். விசாரித்ததில் அதிமுக திடீர் புறக்கணிப்பு செய்ததாகத் தெரியவந்தது. இதனை மற்ற மாவட்டங்களில் இருந்து கிடைத்த செய்தி உறுதிப்படுத்தியது. விழுப்புரத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும்,இன்று நண்பகல் 1 மணி வரை வரவில்லை.திருச்சியில் நடைபெற்ற உண்ணா விரதத்தில் காலையில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள் பின்னர் எழுந்து சென்று விட்டனர்.இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்து ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தம்மால் கலந்து கொள்ள இயலாது என்றும்,தமக்கு பதிலாக முக்கிய நிர்வாகிகளை அனுப்பி வைப்பதாகவும் அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருந்தார்.மற்ற மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.இப்படி ஜெயலலிதா அறிவித்திருந்த நிலையில் இன்று அதிமுகவினர் கலந்து கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.தேமுதிக கலந்து கொண்டதால் அதிமுக புறக்கணிப்பு செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது.பாமக இந்த உண்ணாவிரதத்தில் பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி கலந்து கொள்வார் என்று தா.பாண்டியன் பேசுகையில் குறிப்பிட்டார்.ஆனால் பகல் 1 மணி வரைஜி.கே.மணிவரவில்லை. வரதராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வில்லை. உண்ணாவிரதத்தில் தொல். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), பழ.நெடுமாறன் (தமிழர் தேசியஇயக்கம்), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), இரா. ஜனார்த்தனம் (உலக தமிழர் பேரவை), திண்டிவனம் ராமமூர்த்தி (தேசியவாத காங்கிரஸ்), ஜெகவீரபாண்டியன் (சமூக நீதி), ஷேக்தாவூத் (தமிழக முஸ்லிம் லீக்), இசக்கிமுத்து (மூவேந்தர் முன்னணி கழகம்), வேட்டவலம் மணிகண்டன் (உழவர் உழைப்பாளர்), சுப. இளவரசன் (மக்கள்நீதி), துரைஅரசன் (மறுமலர்ச்சி மக்கள் தமிழகம்), விஜய டி. ராஜேந்தர் (லட்சிய திமுக), இயக்குனர் சீமான்,கவிஞர் முத்துலிங்கம்,ஓவியர் புகழேந்தி,டாக்டர் ரவீந்திரநாத் உட்படப் பலர் கலந்து கொண்டார்கள். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரத போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் பெருமளவில் இதில் பங்கேற்றன.
Nitharsanam.com
|