பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கிளிநொச்சிக்கான இறுதி யுத்தம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 05 October 2008

கிளிநொச்சி நகர் மீது படையினர் எவ்வேளையிலும் இறுதித் தாக்குதலை ஆரம்பிக்கக்கூடும். கடந்த ஒரு வாரமாக அங்கு அகோர ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் இரவு பகலாக நடைபெற்று வருகையில் குண்டு வீச்சு விமானங்களும் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.

மிகப்பெரும் படைநகர்வொன்றுக்கு முன்னதாக இறுதிக் கட்டத் தயாரிப்புகளாகவே இவையிருப்பது போல் தெரிகிறது.

இதனால் அடுத்து வரும் நாட்களில் கிளிநொச்சி நோக்கி படையினர் மீண்டுமொரு முறை பாரிய முன்நகர்வு முயற்சியை மேற்கொள்ளலாமென்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வு முயற்சி கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்படுகிறது.

மன்னார் - பூநகரி வீதியில் (ஏ 32) நாச்சிக்குடாவுக்கு தெற்கேயும், ஏ- 32 வீதிக்கும் ஏ- 9 வீதிக்கும் (யாழ்-கண்டி வீதி) இடையிலும் நிலைகொண்டிருக்கும் படையினர் இரு முனை முன்நகர்வுகளை மேற்கொண்டும் அவை சாத்தியப்படவில்லை. ஏ -32 வீதியில் மன்னாரிலிருந்து நாச்சிக்குடாவின் எல்லை வரை மிக வேகமாக வந்த படையினரால் நாச்சிக்குடாவுக்குள் நுழைய முடியவில்லை.

அதேபோல் ஏ- 32 வீதிக்குச் சமாந்தரமாக, ஏ- 32 வீதிக்கும் ஏ- 9 வீதிக்கும் இடையில் வந்தவர்களால் வன்னேரி, அக்கராயன்குளத்தைத் தாண்ட முடியவில்லை.

நாச்சிக்குடாவைக் கைப்பற்றி அதற்கப்பால் வடக்கே சென்று பூநகரி நோக்கிய நகர்வை மேற்கொள்வதா அல்லது வன்னேரிக்குளத்திற்கும் அக்கராயன்குளத்திற்கும் இடையில் ஊடறுப்புத் தாக்குதலை நடத்தி வடக்கே சென்று கிளிநொச்சி நோக்கிய நகர்வை மேற்கொள்வதா என்பதில் படைத்தரப்புக்கு சிக்கல் நிலவுகிறது. நாச்சிக்குடாவைக் கைப்பற்றி வடக்கே நகர்ந்து விட்டால் நாச்சிக்குடாவுக்கு கிழக்கே வன்னேரிக்குளம் முதல் அக்கராயன்குளம் வரையான பகுதியில் முன்நகர்வு முயற்சி குறித்து படையினர் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

அதேபோல் நாச்சிக்குடாவுக்கும் ஏ -9 வீதியில் திருமுறிகண்டிக்குமிடையில் ஏதாவதொரு பகுதியில் ஊடறுப்புத் தாக்குதலை நடத்தி மேலும் வடக்கே முன்னேறிவிட்டால் நாச்சிக்குடாவைக் கைப்பற்றி முன்நகர வேண்டுமென்ற தேவையில்லை.

பூநகரி நோக்கி ஒரு முனையிலும் கிளிநொச்சி நோக்கி இன்னொரு முனையிலும் முன்னேறும் படையினர் ஏ- 9 வீதியையும் கைப்பற்றி அதனூடாக அல்லது அதற்குக் கிழக்கால் முன்னேறலாமா என்று தீவிரமாக முயற்சித்து வருகையில் கிளிநொச்சிக்கான போர் உக்கிரமடைந்துள்ளது.

சகல முனைகளிலும் தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி படையினரின் முன்நகர்வு முயற்சிகளை தடுத்து நிறுத்தியுள்ள புலிகள், படையினரை கிளிநொச்சி நோக்கி அல்லது பூநகரி நோக்கி முன்நகர அனுமதிப்பதென்பது வன்னியில் ஏ-9 வீதிக்கு மேற்குப் புறத்தை முற்றாக இழப்பதென்பதுடன் ஏ- 9 வீதியின் கிழக்குப் புறத்திற்கான அச்சுறுத்தலை உடனடியாகவே அதிகரிப்பதற்கு அனுமதியளிப்பதாகவும் அமைந்துவிடும்.

வவுனியா - மன்னார் வீதியிலிருந்து கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வடபகுதி நோக்கி படைநகர்வு ஆரம்பிக்கப்பட்டபோது புலிகள் மிகக் கடும் எதிர்ப்பைக் காட்டவில்லை. இது படையினரை இலகுவாக கிளிநொச்சி வரை செல்ல வைத்தது.

தற்போது கிளிநொச்சி எல்லைவரை வந்துவிட்ட படையினருக்கு கிளிநொச்சிக்குள் நுழைய முடியாதிருக்கிறது. கிளிநொச்சிக்கு வெளியே தற்போது கடும் போர் நடைபெறும் முனைகளில் ஏதாவதொரு பகுதியை உடைத்துக் கொண்டு படையினர் உட்புகுந்தாலும் அது கிளிநொச்சியையும் பூநகரியையும் மட்டுமல்ல ஆனையிறவையும் அதற்கப்பால் முகமாலையையும் புலிகள் இழக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.

இதனால்தான் நாச்சிக்குடாவிலிருந்து கிழக்கே திருமுறிகண்டி வரையான சுமார் 30 கிலோ மீற்றர் பிரதேசத்தில் புலிகள் பாரிய மண் அணைகளை அமைத்து மிகப் பெரும் எதிர்ச் சமரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதென்பது கிளிநொச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, அதற்கப்பால் யாழ்.குடாவை கிளிநொச்சியுடன் இலகுவாக இணைப்பதற்கான மார்க்கமென்பதை படைத்தரப்பு அறிந்துள்ளதால், கிளிநொச்சியை கைப்பற்றுவதென்பது உடனடியாகவே யாழ்.குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை திறக்கக் கூடியதொரு வாய்ப்பை உருவாக்கக் கூடிய சமராகவே படைத்தரப்பு பார்க்கிறது.

இதனால்தான் கிளிநொச்சி மீதான போர் வெறுமனே கிளிநொச்சியைக் கைப்பற்றும் போராக மட்டுமல்லாது முழு வட பகுதியையுமே கைப்பற்றும் போராக அரசும் படைத்தரப்பும் பார்க்கின்றன.

இதற்காகவே படையினர் தங்கள் முழுப் படை பலத்தையும் தற்போது கிளிநொச்சிப் போர் முனையில் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இதற்கேற்ப அயல் நாடுகளிலிருந்தெல்லாம் அள்ளிக் குவிக்கப்படும் ஆயுதங்களெல்லாவற்றையும் அரசு வன்னிக்களமுனைக்கு அனுப்பி வருகிறது.

கிளிநொச்சிக்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டுமென்பதில் அரசு மிகுந்த தீவிரம் காட்டுகிறது. இதன் மூலம் மிகப்பெரும் இராணுவ வெற்றியை பெற்று அதனைப் பயன்படுத்தி அரசியல் வெற்றிகளைப் பெற்று விடவேண்டுமென்பது அரசின் திட்டம்.

இதனால், படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றும் பட்சத்தில் ஜனவரிமாதத்தில் பொதுத் தேர்தலுக்குச் செல்ல அரசு தீர்மானித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற இரு மாகாண சபைத் தேர்தல் கூட போரின் வெற்றியை அடிப்படையாகவே கொண்டிருந்தது. இதைப் போன்றே, கிளிநொச்சியை படையினர் கைப்பற்றினால் பொதுத் தேர்தலில், புலிகளை முற்றாக அழிப்பதற்கு மக்கள் ஆணையை முழுமையாகப் பெற்று மிகப்பெரும் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றி விடலாமென அரசு கருதுகிறது.

இதனால் கிளிநொச்சியைக் கைப்பற்ற என்ன விலையையும் கொடுக்க அரசு தயாராயுள்ளதால் கிளிநொச்சிக்கான இறுதிப் போர், பேரழிவை ஏற்படுத்தலாம். நாச்சிக்குடா முதல் திருமுறிகண்டி வரையான புலிகளின் வலுவான பாதுகாப்பு நிலைகளை அழிக்கும் முயற்சியில் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதில் ஏதாவதொரு முனையூடாக முன்நகர்ந்தால் மட்டுமே கிளிநொச்சிக்குள் நுழைய முடியும். இதனால் தான் நாச்சிக்குடா முதல் திருமுறிகண்டி வரை ஆங்காங்கே பல்வேறு பகுதிகளிலும் நிலைகொண்டிருக்கும் புலிகளை அந்தந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளில் படையினர் தீவிர அக்கறை காட்டுகின்றனர்.

வடக்கே நகர்வதை விட நாச்சிக்குடாவுக்கும் திருமுறிகண்டிக்குமிடையில் பக்கவாட்டில் நகர்ந்து இவற்றுக்கிடையிலான விநியோகப் பாதைகளை முழுமையாகக் கைப்பற்றுவதன் மூலமே நாச்சிக்குடாவுக்கும் திருமுறிகண்டிக்குமிடையில் வலுவான தாக்குதலை நடத்தலாமெனப் படையினர் கருதுகின்றனர்.

இதற்கான முயற்சிகளில் தற்போது படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் வன்னேரி மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் கடும் சமர் நடைபெற்று வருகிறது. நாச்சிக்குடாவுக்கும் திருமுறிகண்டிக்குமிடையே ஊடறுத்துச் செல்வதில் நீண்ட தாமதமேற்படுவதால் படையினர் கிழக்கே நகர்ந்து கொக்காவிலைக் கைப்பற்றி ஏ- 9 வீதிக்குச் சென்று விட முனைந்தனர். அங்கு கடும் எதிர்ப்பைச் சந்தித்த அதேநேரம் ஏ- 9 வீதியை கைப்பற்றுவதன் மூலம் கிளிநொச்சி மீதான தாக்குதலை சற்று இலகுபடுத்தலாமென்றாலும் ஏ- 9 வீதிக்குச் செல்லும் படையினர் புலிகளின் தாக்குதல்களுக்கிலக்காகும் வாய்ப்புகள் அதிகமென்பதால் படையினர் கொக்காவிலைக் கைப்பற்றாது தொடர்ந்தும் வன்னேரிக்குளம் மற்றும் அக்கராயன்குளம் பகுதியிலேயே தீவிர கவனம் செலுத்துகின்றனர்.

இந்தச் சமரில் படையினர் தினமும் பலத்த இழப்புகளைச் சந்திக்கின்றனர். புதிது புதிதாக வன்னிக் களமுனைக்கு படையினரை நகர்த்த வேண்டிய தேவையேற்பட்டு வருகிறது.

கிளிநொச்சி மீதான இறுதித் தாக்குதலை ஆரம்பிக்க வேண்டுமானால் நாச்சிக்குடாவுக்கும் திருமுறிகண்டிக்குமிடையிலான புலிகளின் தடுப்புச் சுவரைத் தகர்க்க வேண்டும். அதனைத் தகர்த்தால் மட்டுமே கிளிநொச்சிக்குள் நுழைய முடியும். ஆனால் புலிகளோ இந்த 30 கிலோமீற்றர் நீளப் பாதுகாப்பு நிலைகளை மிகவும் வலுவாக வைத்துள்ளனர்.

சிக்ஸாக் வடிவில் புலிகள் இந்தத் தடுப்பரண்களை வடிவமைத்துள்ளனர். மொத்தம் 3 கட்டங்களைக் கொண்டதாக இந்தத் தடுப்பரண் உள்ளது. முதலில் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட தளம் வருகிறது. அடுத்து பெரும் அகழி (பள்ளம்) வருகிறது. இதைத் தொடர்ந்து, புலிகளின் படையணிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தக் கூடிய பதுங்கு குழிகள் உள்ளன.

இந்த மூன்றையும் சேர்த்தே இங்கு புலிகள் மிகவும் வலுவான நிலைகளை அமைத்து முன்னேற முயலும் படையினர் மீது கடும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். இந்தப் பாதுகாப்பு அரண்களில் முதலில் வரும் கண்ணிவெடிப் பொறியிலிருந்து படையினர் சுலபமாகத் தப்ப முடியாது. கண்ணிவெடி வயலொன்று உருவாக்கப்பட்டுள்ளதால் அதற்குள் சிக்கிவிட்டால், சிக்குவோரின் உடலைக் கூட மீட்க எவராலும் வர முடியாது போய்விடும்.

அந்தளவிற்கு புலிகள் கண்ணி வெடிகள், மிதிவெடிகளை மிக நுட்பமாகப் புதைத்துள்ளதால் அந்தக் கண்ணிவெடி வயல்களைத் தாண்டுவது எப்படியென்பது குறித்து படையினர் குழம்பிப் போயுள்ளனர். தொடர்ச்சியான விமானத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் மூலம் கூட இந்தக் கண்ணிவெடி வயல்களை அழிக்க முடியாதுள்ளது. படையினருக்கு வான்வழித் தாக்குதலும் கனரக ஆயுதங்களும் பக்க பலமாக இருக்கையில் புலிகள் தந்திரமான தாக்குதல்கள் மூலம் இங்கு படையினருக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒரு வேளை இந்தக்கண்ணி வெடி வயலைத் தாண்டிவிட்டால் அடுத்து பாரிய அகழிகள் உள்ளன. பத்தடிக்கும் மேற்பட்ட அகலத்தையும் பத்தடிக்கும் மேற்பட்ட ஆழத்தையும் கொண்ட இந்த அகழிகளை யுத்த டாங்கிகளாலும் கவசவாகனங்களாலும் கடந்துவிட முடியாது.

கண்ணிவெடி வயலை கடந்து அகழிப் பக்கம் வந்துவிட்டால் பதுங்குகுழிகளிலிருந்து கடும் தாக்குதலை நடத்தும் புலிகளின் அணிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இப்படி படையினரால் இலகுவில் தாண்டமுடியாதவாறு அமைத்துள்ள பாதுகாப்பு அரண்களைப் பயன்படுத்தியே பாரிய படை நகர்வைப் புலிகள் தடுத்து வருகின்றனர். எனினும் புலிகளின் இந்தப் பாதுகாப்பு அரண்களை தகர்த்தவாறு முன்செல்ல படையினர் தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்,

வன்னேரிக்குளம் - அக்கராயன்குளம் பகுதியில் தொடர்ந்தும் கடும் சமர் நடைபெற்று வருகையில் கிளிநொச்சி நகர் மீதான தாக்குதலை விமானப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். புலிகளின் முக்கிய அலுவலகங்கள் மீதெல்லாம் கடும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டு அந்தக் கட்டிடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அகோர ஷெல் தாக்குதலிலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலிலும் கிளிநொச்சி நகர் சல்லடை போடப்படுகிறது.

கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதாயின் அங்கு கட்டிடங்கள் உருப்படியாக இருந்தால்தான் அது படையினருக்கு வசதியாயிருக்கும். ஆனால், கட்டிடங்களையெல்லாம் அழிப்பதென்பது கிளிநொச்சியைக் கைப்பற்றாவிட்டாலும் நகருக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தி புலிகளின் நிர்வாக செயற்பாடுகளை முழுமையாகச் சீர்குலைத்து விடவேண்டுமென்ற நோக்கம் கொண்டதாயிருக்கலாமெனவும் கருதப்படுகிறது.

அதேநேரம், புலிகள் அண்மையில் களமுனையில் நச்சுவாயு அல்லது இரசாயன வாயுவைப் பயன்படுத்தியதாக பெரும் பிரசாரம் செய்த படைத்தரப்பு தற்போது வன்னிக்கள முனையில் எரிகுண்டுகளை வீசத் தொடங்கியுமுள்ளது.

மிக மோசமான உயிரழிவை ஏற்படுத்தக்கூடிய இந்த எரி குண்டு, யுத்த முனையில் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசவும் வழிவகுக்கும். வளியிலுள்ள அனைத்து வாயுக்களையும் முற்றாக உறிஞ்சி சுவாசிக்க முடியாத நிலையொன்றைத் தோற்றுவித்து பாரிய உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும்.

குண்டுப் பாவனையானது யுத்த முனையில் படையினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். புலிகள் பயன்படுத்தும் நச்சுவாயுக்களிலிருந்து படையினரைப் பாதுகாப்பதற்கு முகமூடிகள் பயன்படுத்தப்படுவதாக படைத் தரப்பில் கூறப்பட்டாலும் புலிகளுக்கேதிராக படையினர் பயன்படுத்தும் எரி குண்டுகள் மற்றும் இரசாயனக் குண்டுகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவே தற்போது அவர்களுக்கு முகமூடிகள் வழங்கப்படுவதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.

கிளிநொச்சியை கைப்பற்றுவற்காக அரசு எதனையும் செய்ய முனைகிறது. குறிப்பிட்டளவு படையினரை இழந்தாவது கிளிநோச்சிக்குள் நுழைய படைத்தரப்பும் முயல்கிறது. இந்தளவு தூரம் வந்த பின் கைக்கெட்டும் தூரத்திலுள்ள கிளிநொச்சியை விட்டுவிட அரசும் படைத் தரப்பும் தயாரில்லை.

சிங்கள ஊடகங்களை கேட்கும் போதும் வாசிக்கும் பொழுதும் வடக்கு, கிழக்கில், இப்பொழுது வடக்கில் மாத்திரம் நடைபெறுவது ஒரு யுத்தம் என்றும் அந்த யுத்தம் பயங்கரவாதத்திற்கெதிராக நடாத்தப்படும் போர் என்றும் கூறப்படுவதை அவதானிக்கலாம்.

இந்த யுத்தத்தில் இலங்கைப்படையின் போர் வீரர்கள் தாய்நாட்டை காப்பதற்காகவும் மீட்பதற்காகவும் போராடுகிறார்கள் என்று கூறப்படுகின்றது. போர் வீரர்களை "ரணவிறு" என்ற மரியாதை பன்மை பயன்பாடே பேசப்படுகிறது. அதுவும் கிளிநொச்சி தாக்குதல் தொடங்கியதன் பின்னர் நடப்பது மனிதாபிமானப் போர் என்றும் தமிழ் மக்களை விடுவிப்பதற்காக நடைபெறும் போர் என்றுமே சுட்டிக்காட்டப்படுகிறது.

அதற்கு மேல் விடுதலைப் புலிகளின் ஆட்கொல்லி தலைமையே இப்போருக்கு காரணம் என்று வலுவாக எடுத்துக் கூறப்படுகிறது. நேற்று, இன்று அழுத்தம் சற்று வித்தியாசப்பட்டு சர்வதேச புகழிடத் தமிழர்கள் இந்தப் போராட்டத்திற்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. பத்திரிகைத் தலையங்கங்கள் முதல் வானொலிச் செய்திகள் வரை இந்தக் கோஷமே முன்வைக்கப்படுகிறது.

இவற்றை ஒரு புன்முறுவலுடன் ஒதுக்கி விட்டு, "களத்தில் நடப்பது என்ன" என்று சிந்திக்கும் போக்கே பல தமிழ் வாசகர்களிடையேயும் கேட்போர்கள் இடையேயும் காணப்படுகிறது.

ஆனால் இது ஒரு பாரதூரமான தமிழர்களின் போராட்டம் பற்றிய அபிப்பிராயத்தையே சிங்கள மக்கள் இடையே மாற்றுவதற்கான முயற்சி என்பதையும் அந்த முயற்சியில் அரசாங்கம் கணிசமான வெற்றியை ஈட்டியுள்ளது என்பதையும் நாம் புறம்தள்ளிவிட முடியாது.

சிங்கள மக்கள் இதனை உண்மையாகவே ஒரு தர்மயுத்தமாகவே பார்க்கிறார்கள். விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற மிக, மிக குறைவான சிங்கள இடதுசாரி தலைவர்களை விட வேறு எவருமே இந்த விடயத்தில் எதிர்ச்சொல்லு கூறுவது கிடையாது. சுதந்திர சிங்கள பத்திரிகையான "ராவய" கூட இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறது. நடப்பது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்கின்ற நிலைப்பாடு அந்தப் பத்திரிகையில் தெரிவதை எவருமே மறுப்பதில்லை.

இது மிக சுவாரசியமான சில அரசியல் முடிவுகளுக்கு இடம் ஏற்படுத்தியுள்ளது. அதில் பிரதானமானது ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முதல் சந்திரிகா பண்டாரநாயக்க வரை எந்த ஒரு பிரதமராலும் ஜனாதிபதியாலும் செய்ய முடியாத காரியத்தை இப்போதைய ஜனாதிபதி செய்து காட்டுகிறார் என்பதுவே பொதுவான அபிப்பிராயமாக வளர்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் பொதுமக்களின் ஆணை (ஜனவரம) உண்டு என்று சொல்லப்படுகிறது. சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் அரச, தனியார் சிங்கள ஊடகங்கள் கூறுவதை அவர்கள் முற்றுமுழுதாக நம்புகிறார்கள். நடப்பது ஒரு யுத்தம் தான் என்பதை எவருமே மறுத்துவிட முடியாது.

ஆனால் இதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் இந்தப் போரின் அடித்தளமாக அமையும் காரணம் இலங்கையின் இனப்பிரச்சினை தான் என்ற கருத்து படிப்படியே சிங்கள மக்களிடம் அகற்றப்படுகிறது. இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

முற்றுமுழுதாக தமிழ் மக்களுக்கு எதிராக இது சென்றுவிடலாம் என்ற பயமும் ஒர் அளவு இல்லாமல் இல்லை. இதனாலேயே இந்த யுத்தம் குறிப்பாக வவுனியாவிற்கு கிழக்கே மனிதாபிமான போராக சித்திரிக்கப்படுகிறது.

விருப்பு வெறுப்பு இன்றி நோக்கினால் அரசாங்கம் தன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்காக இதனை (இவற்றை) செய்கிறது என்பது உண்மை.

அரசாங்கம் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொள்வதற்காக இவ்வாறு கூறுவதை தவிர்க்கவும் முடியாது. ஆனால் அரசாங்கமே எதிர்பாராத ஒரு உளவியல் பலாபலன் ஏற்படுவதற்கான ஒரு வாய்ப்பு உண்டு என்கின்ற ஆபத்தையும் அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. ஏனெனில் வவுனியாவிற்கு அப்பால் உள்ளவர்களை எதிரிகளாக தமிழர்களை பார்க்கும் ஒரு மனோ பாவத்தை இது ஏற்படுத்துகிறது. இதனை சற்று மறைமுகமாக இன் னொரு நிலைப்பாடு காட்டுகிறது.

கிழக்கிலிருந்து புலிகள் கலைக்கப்பட்டுவிட்டார்கள் என்று கூறும் அதேவேளையில் அங்கு ஏற்பட்டுள்ள புதிய அரசியல் அபிவிருத்தி நடவடிக்கைகள் எத்தகைய சிக்கல்களுக்கு இடம்கொடுக்கின்றன என்பது பற்றிய பேச்சே பெரும்பாலும் சிங்கள ஊடகங்களில் இல்லை. மட்டக்களப்பு மாவட்ட முதலமைச்சரின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அதில் ஏற்பட்டுவரும் சிக்கல் குறித்தும் எதுவுமே பேசப்படுவதில்லை. உதாரணமாக அவர்கள் தங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்றே கூறிக்கொள்கிறார்கள் என்பது சொல்லப்படுவதில்லை. (கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் நிலைமையும் முன்னர் போல இல்லை என்பது இப்பொழுது தெரிய வருகிறது).

இத்தகைய சூழலில் பாராளுமன்ற தமிழ்த் தலைமை செய்ய வேண்டுவன பல உண்டு. தமிழ்க் கூட்டமைப்பினர் இன்னும்தான் பாராளுமன்றத்தை தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதற்கான வலுவான ஒரு மன்று ஆக்கவில்லை என்பதனை கவலையுடன் ஒத்துக்கொள்ளவே வேண்டியுள்ளது. தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் மனதில் வைத்திருக்க வேண்டிய விடயம் பாராளுமன்ற செய்திகளை கூட்டிக்குறைத்தோ மழுப்பியோ விடும் அதிகாரம் ஊடகங்களுக்கு இல்லை.

வானொலி, தொலைக்காட்சி ஆகியவை பேசோது விட்டாலும் அச்சு ஊடகங்கள் மிகச்சிறிய அளவிலேனும் பாராளுமன்றத்தில் நடப்பவற்றை பிரசுரித்தே ஆக வேண்டும். அது மாத்திரம் அல்ல.

முன்னாள் எம்.பி. கா.பொ.இரத்தினம் அவர்கள் தமிழர்கள் பற்றிய பாரபட்சங்கள், செயல் இன்மை ஆகியவற்றை வினாக்கள் மூலம் கேட்டுவிடுவார். சம்பந்தன், சுரேஷ்பிரேமச்சந்திரன் போன்றவர்களின் குரல் இவ்விடயத்தில் கேட்கின்றது என்றாலும் இது நிச்சயமாகப் போதாது என்றே கூறவேண்டியுள்ளது.

அரசாங்கத்திற்கு புத்திமதி என்று கூறாமல் ஒரு யதார்த்தமான அரசியல் உண்மையை அழுத்தம் திருத்தமாகக் கூறவேண்டியுள்ளது. அரசாங்கத்தின் இந்தச் செயல்கள் பெரும்பாலான சிங்கள மக்களிடையே வடக்கு, கிழக்கு வெல்லப்பட வேண்டிய இடங்கள் என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது. இது நாட்டினுடைய இணைவுக் கோ சௌஜன்னியத்துக்கோ உகந்த ஒன்றல்ல என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கில் நடைபெறும் யுத்த நடவடிக்கைகள் முழுவதையும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற ஒரு தள மட்டத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு அளவிட முயன்றால் பிரச்சினைகள் கூடுமே அன்றி குறையாது.

ஆனால், உண்மையான அடிப்படை நிலை என்னவென்றால் தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தென்னிலங்கைக் கட்சிகளும் அரசாங்கங்களும் இன்னுமே தங்கள் இடத்து எவ்வித திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை.

தமிழர் பிரச்சினைக்கு முகம் கொடுப்பதற்கு பதிலாக வடக்கு, கிழக்கு பற்றிய விரோத உணர்வை சிங்கள மக்கள் இடையே வளர்ப்பது இலங்கையின் எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல.

விடுதலைப் புலிகளோடு உள்ள கோபத்தை காட்டுவது வேறு, இலங்கைத் தமிழர் பிரச்சினையை பார்ப்பது வேறு என்ற உண்மையை கலைஞர் கருணாநிதி இந்தியாவின் தொழில் கட்சிகள் மூலம் அறிய வந்திருப்பது ஒரு நல்ல பாடமாகும். இத்தகைய போக்கு இலங்கைத் தமிழ்ப் போரில் விடுதலைப் புலிகளை இன்றுள்ள நிலையில் இன்றியமையாதவர்களாக்கிவிட்ட��
�ள்ளது என்ற யதார்த்தமே மேலோங்குகிறது.

(தொடர்ச்சி பாதுகாப்பு நிலைவரம் பக்கம் பார்க்க)


விதுரன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..