|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதனால் சபை சிறிது நேரம் அல்லோலகல்லோலப்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டநீடிப்பு விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது பேச்சில் குறுக்கீடு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீகாந்தாவின் கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தார். ஸ்ரீகாந்தா எம்.பி.டக்ளஸின் கருத்துகளைச் சாட்டை செய்யாமல் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால், ஒருகட்டத்தில் பொறுமையிழந்த ஸ்ரீகாந்தா ஜனாதிபதியின் பொக்கட்டுக்குள்ளிருக்கும் நாய்க்குட்டிகளின் குரைப்புகள் எல்லாம் எம்மை ஒன்றும் செய்து விடாது என்று கூறினார்.
இதனால் கடும் கோபமடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூச்சலிட்டார்.
இதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் டக்ளஸூக்கு எதிராகக் கூச்சலிடத் தொடங்கினர்.
இதனால் அமைச்சர் டக்ளஸூக்கு ஆதரவாக அரசதரப்பினரும் கூச்சலிடத் தொடங்கினர். இதனால் சபை சிறிது நேரம் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஆசனத்தில் அமர வைப்பதற்காக அமைச்சர் டியூ குணசேகர பெரும் பிரயத்தனப்பட்டார்.
அமைச்சர் டக்ளஸோ ஆசனத்தில் அமருவதும் எழும்புவதுமாக உரத்த தொனியில் பேசினார்.
சபாநாயகர் இரு தரப்பையும் பெரும் சிரமத்தின் மத்தியில் அமைதிப்படுத்திவிட்டு அவசரகாலச் சட்ட நீடிப்புக்கான வாக்கெடுப்பைத் தொடங்கினார்.
தொடர்ந்து மீண்டும் சபையில் கூச்சல்கள் எழுந்தன. மீண்டும் சபாநாயகர் பெரும் முயற்சி எடுத்து சபையை கட்டுப்படுத்தினார்.
சபையில் இடம்பெற்ற கூச்சல், குழப்பங்கள், வாக்குவாதங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா சிரித்தவாறு அவதானித்துக் கொண்டிருந்தார்.
நெருடல் இணையம்
|