|
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது கண்ணிவெடித்தாக்குதல்: 3 பேர் பலி; 4 பேர் காயம் |
|
|
|
Sunday, 12 October 2008 |
|
அம்பாறை மாவட்டத்தில் உள்ள வம்மியடியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நால்வர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
வம்மியடி சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து சுற்றுக்காவல் நடவடிக்கைக்காக சிறப்பு அதிரடிப்படையினர் கால்நடையாக சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் மீது விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:25 நிமிடமளவில் கண்ணிவெடித்தாக்குதலை நடத்தினர்.
இதில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் உடல் சிதறி அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். நால்வர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்தினையடுத்து அந்தப்பகுதிக்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டினை நடத்தி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
இம்மாதம் 1 ஆம் நாளிலிருந்து இன்றுவரை அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் இரண்டு அதிகாரிகள் உட்பட ஆறு சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
நெருடல் இணையம்
|