|
|
|
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமைகள் பறிக்க மகிந்த சகோதரர்கள் திட்டம் |
|
|
|
Sunday, 02 November 2008 |
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிவில் உரிமைகள் பறிபோகக்கூடிய அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் இறைமைக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக 6ம் இலக்க அரசியல் திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்து வரும் அனைவருக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்த் தேசிக் கூட்டமைப்பினர் பகிரங்கமாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறித்து ஆராயப்படவுள்ளது.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிப் பிரதிநிதிகளுடன் வெளிநாடுகளில் இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தின் 6ம் இலக்க சட்டமூலத்தின் அடிப்படையில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அனைவரும் இலங்கை தேசத்தை ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கும் வகையில் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாறாக உள்நாடு, வெளிநாடுகளில் இலங்கை தேசத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அசையும், அசையா சொத்துக்களை முடக்கவும், உறுப்பினர் பதவியை ரத்து செய்யவும் அரசியல் சாசனத்தில் அதிகாரம் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலும், குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் சிவில் உரிமைகளை பறிப்பதற்கான சந்தர்ப்பமும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நெருடல் இணையம்
|
|