|
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வான் வழியாக போக்குவரத்து செய்துள்ளனர் – ஜேன்ஸ் ஆய்வு |
|
|
|
Saturday, 15 November 2008 |
|
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதங்களை வான் வழியாக போக்குவரத்து செய்துள்ளதாக உலகின் பிரபல இராணுவ ஆய்வு சஞ்சிகையான ஜேன்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஒரு தடவையேனும் புலிகள் ஆட்டிலறி தோட்டக்களை விமானம் மூலமாக வன்னிக்கு எடுத்துச் சென்றுள்ளதாக அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டு விமான ஓடு பாதைகளை அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஓடுபாதைகளின் மூலம் இராணுவ தளவாடங்களை விமானம் மூலம் போக்குவரத்து செய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், வர்த்தக செய்மதி ஒன்றின் உதவியுடன் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
செய்மதிப் படங்களின் மூலம் தென்படும் விமான ஓடுதளங்கள் பாவனையில் உள்ளனவா என்பது குறித்து சரியான தகவல்களை வெளியிட முடியாதெனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பாரிய பொருட் செலவில் அமைக்கப்பட்டுள்ள விமான ஓடு தளம் மற்றும் ஏனைய வசதிகளைக் கருத்திற் கொள்ளும் போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விமான போக்குவரத்துக்களை மேற்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஜேன்ஸ் ஆய்வு தெரிவித்துள்ளது.
2006ம் ஆண்டு முதலான யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் கிழக்கின் கட்டுப்பாட்டை இழந்துள்ளனர். வன்னியில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் புலிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, தொடர்ச்சியான ஆயுத விநியோகம் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது.
கடல் வழியான பாதுகாப்பு அண்மைக்காலமாக இராணுவத்தினரின் நடவடிக்கைகள் என்பனவற்றை கருத்திற் கொள்ளும்போது, புலிகள் வான் வழியாக ஆயுதங்களை கொண்டு செல்லக் கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புலிகள் வான் மூலமாக ஆயுதங்களை போக்குவரத்து செய்யக் கூடிய சாத்தியம் இல்லை என விமானப்படைப் பேச்சாளர் ஜானக்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணப்படும் ராடர் கட்டமைப்பின் மூலம் குறித்த வகையிலான விமான போக்குவரத்துக்களை உடனடியாக அடையாளம் காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு இடையில் ஆகாய வழி ஆயுதப் போக்குவரத்து பற்றிக் கூட இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடம் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வான் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்திய விமானப் பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும், கடல் வழியாகவே புலிகள் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும்,அண்மைக்காலமாக இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் காரணமாக புலிகளின் கடல்வழிப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|