 கும்மியடி பெண்ணே, கும்மியடி - பெருங் கூட்டத்துடன் வந்து கும்மியடி! நம்முடை மண்ணில் ஜனாதிபதி தேர்தல் நாடகமே என்று கும்மியடி! தென்னிலங்கை என்னும் தீவினிலே - எங்கள் செந்தமிழர் இன்னும் தீயினிலே! முன்னிருந்தே இந்தத் தீயை மூட்டுவ(து) இம் மூடர் தேர்தலென்று கும்மியடி! அள்ளி வீசிடுவர் வாக்குறுதி - இங்கு ஆயிரம் பேசுவர் காப்புறுதி! நள்ளிரவு வரை நா சலிக்காமல் நடிப்பர் என்று சொல்லி கும்மியடி!
புத்தர் பெயர்சொல்லும் பித்தர்களும் - கொல்லும் போர்வெறி கொண்ட கயவர்களும் மெத்தப் புனிதர்போல் வேடங்கட்டி ஆடும் மேடை இதுவென்று கும்மியடி! நீலிக் கண்ணீர் வடிக்கின்றவரும் - நெஞ்சில் நேர்மையராய் நடிக்கின்றவரும் கூலிக்கு மாரடிக்கின்றவரும் வந்து கூத்தடிப்பார் என்று கும்மியடி! பச்சைப் புளுகை விதைப்பவரும் - கள்ளிப் பாலைப் `பருகு!`எனச் சொல்பவரும் பிச்சைக் கலங்கள் சுமந்தபடி வரும் பேரணி இதென்று கும்மியடி! ஐந்து வருடத்துக் கோர்முறைதான் - இந்த ஆட்சியாளருக்குக் கண்விழிப்போ? நைந்து வருந்தும் தமிழரிடம் திடீர் நட்பென்னவோ என்று கும்மியடி! மாடு, மனை, நிலம், வீடிழந்து - தமிழ் மாந்தர் உழன்றிட வைத்தவர்கள், நீடு சுதந்திரம் நல்குவது என்ன நிச்சயமோ என்று கும்மியடி! இன்னும் விடுதலை கிட்டவில்லை - எங்கள் ஈழம் சுயநிலை எட்டவில்லை: பின்னும் எதற்கிந்த பித்தலாட்டமென்று பெண்டிர் குடும்பமே, கும்மியடி! நாங்கள் பிறந்தது ஈழமடி - அந்த நாடு தமிழ்ப் பெரு ஞாலமடி! தீங்கு வயப்படு சிங்களப் பேரினத் தேர்தல் விழல்என்று கும்மியடி! தொ. சூசைமிக்கேல்
|