பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow விரைவாக இருநாடு உருவாகலாம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

விரைவாக இருநாடு உருவாகலாம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 16 September 2005

தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரித்து அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதை சிங்கள அரசியல் தலைமைத்துவங்கள் விரும்பவில்லை. பேரினவாதத்தில் மூழ்கி இனவாதங்களைத் தொடர்ச்சியாக விதைத்து வருவதான செயல் விரைவாக இரு நாடுகள் என்ற வரலாற்றை எழுதுவதற்கே வழிவகுக்கும். அன்னிய ஏகாதிபத்திய சக்திகள் இலங்கைதீவை தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருந்தது.

அவர்கள் வெளியேறிய போது அதன் அதிகாரத்தைச் சிங்களத் தலைமைத்துவங்களின் கைகளில் வழங்கி விட்டுச் சென்றதால் அவர்கள் இது சிங்கள தேசம், எங்கள் நாடு என இனவெறியால் வரிவடிவம் கொடுக்கின்றார்கள். ஆனால் இதில் தமிழினம் வாழ்ந்த வரலாற்று சுவடுகள் இன்னும் அழிந்து விடவில்லை. அது மீளவும் தமிழினம் ஆளுகிறது என்ற வார்த்தைகளை மெய்பிக்கவே செய்யும்.

இப்போது ஜனாதிபதித் தேர்தலுக்காக சிங்கள தேசம் தயாராகின்ற நிலையில், அவர்களின் பேரினவாத முகங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என்ற கொள்கையை மீளவும் நிலை நாட்டுவதற்கான சூழ்ச்சிகள், அபாய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. எந்த மதத் துறவியானாலும் அவர்களின் குண இயல்புகள் சாதுவாக இருக்கும். மென்போக்கான குணம் அவரின் மதகுரு என்பதற்கான அடையாளப்படுத்தல். ஆனால் பிக்குகளை இப்போது அவ்வாறு நோக்க முடியாது.

அரசகுமாரன் சித்தாத்தன் தனது அரச சுகபோகங்களை வெறுத்து போதி மாதவனாக புத்த பகவானானார். இந்த புத்த பகவானின் போதனையைப் புகட்டி நாட்டில் சாந்தி சமாதானம் ஏற்படுத்த வேண்டிய பிக்குகள் இன்று இனவாதத்தை வளர்த்து வருகின்றனர். அது கொழுந்து விட்டு எரிகிறது. ஒரு புறம் ஜே.வி.பி மறுபுறம் பிக்குகள். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் யதார்த்தத்தை உணராது அழித்து விடுவோம் என ஆவேசப்பட்டு நிற்கிறார்கள்.

அவர்களின் அடாவடித்தனங்களை தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு அராஜகம் புரிய வைப்பதற்கான ஒரு தலைமைத்துவம் தேவை. தமிழினத்துக்கு எதிரான வில்லன் யார்? இப்போது மகிந்த மீது இந்த இனவாதிகள் மகுடம் சூட்டியிருக்கின்றனர்.

நிபந்தனைகளை விதித்து உடன்படிக்கையில் கையொப்பமிட்டு தமிழினத்திற்கு எதிராக சதிகாரச் செயல்களில் ஈடுபடுவதற்கு தங்கத் தட்டில் வைத்து தமது ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். தேர்தல் வெற்றியும் சிங்கள ஆதிக்கமுமே இங்கு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக சிங்கள அதிகார தரப்பின் ஆதிக்கம் தமிழ் மக்களின் உரிமைகளை நலிவடையச் செய்துள்ள நிலையில் இன்னும் அதனைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான அபாய உடன்படிக்கை தான் மகிந்த கையொப்பமிட்ட உடன்படிக்கை. அது நாட்டை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும். தமிழ் மக்கள் பலமோடு இருக்கின்றனர். இலங்கைத் தீவில் இரு நிருவாகங்கள் நடைபெறுகின்றன.

இது சிங்கள நாடு எனக் கூறுவபர்கள் ஓமந்தைக்கு அப்பால் அனுமதியின்றி கால் வைக்க முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டம் வெறும் ஆயுதப் போராட்டமாக மட்டும் கொண்டிருக்கவில்லை.

ஒரு நாட்டின் ஆட்சியை நடத்துவதற்கான பல கட்டுமானங்களைக் கொண்டிருக்கிறது. இதனைப் போரியலுடன் தேசியத் தலைவர் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். அத்தோடு ஒட்டுமொத்த தமிழினமும் தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றனர். விடுதலையை விரைவாக வென்றெடுக்க வேண்டும். தேசியத் தலைவரின் காலத்தில் தமிழினம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆதங்கத்திலுள்ளனர்.

இந்நிலையில் இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்குப் பின்னோக்கியுள்ள நிலைக்கு சிறுபான்மை சமுகத்தைத் தள்ளி விட்டு இலங்கைத்தீவு எங்கும் சிங்களக் கொடியைப் பறக்க விடலாம் என மகிந்த ராஜபக்ஷ, வீரவன்ச, சோமவன்ச மற்றும் பேரினவாதப் பிக்குகள் கனவு காண்பார்களாயின் அது நிறைவேறாது.

அது அழிவுகளை ஏற்படுத்தும். தென்னிலங்கை எங்கும் ஒப்பாரி வைத்து அழவைப்பதற்கான ஒரு சூழலையே இவர்கள் ஏற்படுத்துகின்றார்கள் என்பதை சிங்கள மக்கள் உணர வேண்டும்.

தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச சக்திகளின் துணையுடன் பலவீனப்படுத்தலாம் என்பது இவர்களது திட்டமாக இருக்கலாம். ஆனால் அது நிறைவேறப் போவதில்லை விரைவாக இரு நாடுகள் உருவாகவே அது வழியமைக்கும்.


anpu
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..