கண்ணீரில் கரையும் கல்லறை தெய்வங்கள்
- இவ் விடயம் 27. 11. 2009, (வெள்ளி),தமிழீழ நேரம் 20:07க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள்
கருக்கொள்ளும் போதே கல்லறைத்
தெய்வங்களாகக் கடவது என
காலன் சொன்னானோ என்னவோ
கனவுக்காக உயிர்கொடுக்கச் சென்ற
காலத்தின் புதல்வர்களே கார்த்திகை நாளில்
வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி
கணப்பொழுதும் கண்துஞ்சாது காத்திருந்து
கந்தகம் சுமந்து காவியமான காவிய நாயகர்களை
காசுக்காக விற்றுவிட்டு உங்கள்
கல்லறைகளிலும் வைத்து சில்லறை பார்க்கும்
கார்த்திகை நாளில் வணங்குகிறோம் எம்
இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும்
சிறு கடுகளவேனும் கருணை கொண்டு
கார்த்திகைப் பூக்களை காலால் நசுக்குவது போல்
கல்லறை தெய்வங்களையும் சிறு
கணப் பொழுதுடன் மறந்துவிடுகிறோம் எம்
களியாட்டங்கள் தொடர்வதற்காய்
விளக்கிலே பட்டு வீழ்ந்துபோகும்
விட்டில்கள் போல உங்கள்
வீரம் விளைந்த விடுதலை வேட்கையும்
வீணர்களால் வீணாய்ப் போய்விட்டதே
உங்கள் பாதம் பட்டு சேதிகள் சொன்ன
பற்றைக்காடுகள் கூட பாசறைப் புலிகளின்
பரிதாபங்கண்டு இரங்கற்பா இசைக்கும்
இதயம் கனத்து…
எங்குபோய்த் தேடுவது எம் குலவிளக்குகளை
கார்த்திகை நாளில் காற்றுக் கூட
கானமிசைக்கும் எம் மாவீரர் நினைவைச் சுமந்து
ஆறுமணிக்கு ஒலிக்கும் ஆலய மணியின் ஓசையில்
உம் ஆன்மாக்களின் துடிப்பு நாதமாய் கேட்கும்
தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்
பேழைகளே பாடல் ஒலிக்கும் போது உயிரைப் பிழியும்
வலியை உணர்ந்தோம் உங்களுக்காய் ஏற்றப்படும்
ஒவ்வொரு தீபமும் எம் உள்ளத்தை உருக்கி
நெருப்பாக்கும் உண்மையை உணர்ந்தோம்
உங்கள் துயிலுமில்லத்தில் பொழியும் மழைகூட
உங்கள் கண்ணீராய் உணர்ந்தோம் அதுவே
எம்மை ஆசீர்வதிப்பதாய் நினைத்தோம் இன்று
அதே மழை நாங்கள் செய்த பாவத்திற்காய்
நீங்கள் வடிக்கும் அமிலமழை போல எம்மை
சாபமிடுவதாய் உணருகிறோம்
பலலட்சம் பேரின் கனவுகளை சிலஆயிரம் பேரில்
சுமத்திவிட்டு உம்மை அந்தரிக்க விட்டுவிட்டு
ஆறுதலாய் இருந்து விட்டோம் இப்போது
அடுத்த வேள்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்
ஆடுகளைத் தேடி பலியிடுவதற்காக
- ஜீவா
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!


