தேர்தலின் பின்னர் இந்தியாவின் நிலைப்பாடு: இந்திய செய்திதாள்களின் கருத்துக்கள்
- இவ் விடயம் 04. 02. 2010, (வெள்ளி),தமிழீழ நேரம் 14:42க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள்
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவானமையை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை இந்தியா கவனமாக ஆராய்ந்து வருவதாக இந்திய தரப்புகள் தெரிவிக்கின்றன. அதேவேளை இந்திய நிலைப்பாடு குறித்து செய்தித்தாள்கள் பல்வேறு கலப்புக் கருத்துக்களை முன்வைத்துள்ளன.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவானமையை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை இந்தியா கவனமாக ஆராய்ந்து வருவதாக இந்திய தரப்புகள் தெரிவிக்கின்றன.
இந்தியா, பிராந்தியத்தில் சீனாவினதும் பாகிஸ்தானினதும் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில், இலங்கையுடன் நட்புறவை கொண்டிருக்கிறது.
அந்தவகையில் இந்தியா இலங்கையின் யுத்தத்திற்கு குறித்தளவு ஆயுத உதவிகளையும் வழங்கியது என்பது தெரிந்த விடயம். இந்தநிலையில், இந்தியாவின் மாநிலமான தமிழகத்தை திருப்திபடுத்துவதற்காக இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கவேண்டிய நிலைப்பாட்டில் இந்தியா, இலங்கையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.
எனினும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் எவ்வித அடிப்படை தீர்வுகள் இல்லை என்பதையே அவரின் போக்குகள் காட்டி நிற்பதாக தெ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திதாள் அண்மைய வெளியீடு ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் அரசியல் வரைபுக்காக இந்தியா காத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் இலங்கைக்கு இந்தியா இந்த விடயத்தில் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் த இந்தியன் எக்ஸ்பிரஸ் கோரியுள்ளது.
சிங்களவர்களை திருப்திப்படுத்தக்கூடிய தீர்வு ஒன்றையே மஹிந்த ராஜபக்ச விரும்புகிறார் என்ற விடயம், உண்மையில் தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவப் போவதில்லை என்ற கருத்தை பலரும் கொண்டிருக்கின்றனர்.
ஜனாதிபதியாக மீண்டும் தெரிவானதன் பின்னர் மஹிந்த ராஜபக்ச, பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துடனேயே இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் எனக் கூறியிருப்பது அவர் அந்த விடயத்தில் அதிக விசேட அக்கறையை கொண்டிருக்கவில்லை என்பதையே சுட்டி நிற்பதாக தமிழ்த் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தமது நிலைப்பாட்டின் மூலம் இலங்கையில் யுத்தத்தை வெற்றிகொள்ள உதவிய சிங்கள கடும்போக்காளர்களை திருப்திப்படுத்துவதே மஹிந்தவின் நகர்வாக உள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது.
இந்தநிலையில் டைம்ஸ் ஒவ் இந்தியா செய்தித்தாளின் கோடிட்ட செய்தி ஒன்றின்படி, மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியமைத்தால் அது சீனாவுக்கு நன்மை பயக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் ஆட்சி இந்தியாவுக்கு சார்பாக இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவைப் பொறுத்தவரை அந்த நாடு இலங்கைக்கு அதிகளவில் ஆயுத விநியோகத்தை மேற்கொள்வதுடன், அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுகம் ஒன்றையும் நிர்மாணித்து வருகிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அது இந்தியாவுடன் புதிய உறவுகளை விருத்தி செய்து வருவதன் மூலம் பிராந்தியத்துக்குள் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதனை கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட அமெரிக்காவின் செனற்சபை அறிக்கையின் மூலம் தெரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. இதேவேளை இந்தியாவின் த ஹிந்து செய்திதாள் மஹிந்த ராஜபக்சவின் நடவடிக்கைகளை, இந்தியாவுக்கு சார்பான நடவடிக்கைகளாகவே தாம் கருதுவதாக தெரிவித்துள்ளது.
இதற்கு உதாரணமாக அது, ஓமந்தைக்கும் பலாலிக்கும் இடையிலான ரயில் பாதை புனரமைப்பை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் தென்னிலங்கையின் மாத்தறை ரயில் சேவை புனரமைப்பையும் அது சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம் மஹிந்த ராஜபக்சவின் மீள்வெற்றியையும் அது வரவேற்றுள்ளது.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!


